புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ," தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை. மக்களின் பேராதரவோடு கலைஞர் வகுத்து தந்த பாதையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மிக சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த காலகட்டம் தமிழ்நாட்டின் பொற்காலம்.
திராவிட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்த சமரசமுமின்றி முதலமைச்சர் ஸ்டாலினும், தி.மு.க-வும் உறுதியாக இருக்கிறது. தி.மு.க அரசின் ஓர் ஆண்டு கால ஆட்சிக்கும் பா.ஜ.க வின் எட்டாண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. தி.மு.க வின் ஓர் ஆண்டு ஆட்சியை மலை என்று கூறினால் பா.ஜ.க வின் எட்டாண்டுகள் ஆட்சியை மடு என்று தான் கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.