தமிழ்நாடு

“மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய அரசுதான் திமுக அரசு” : முதல்மைச்சர் பெருமிதம்!

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திய அரசுதான் இந்த அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய அரசுதான் திமுக அரசு” : முதல்மைச்சர் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, “அனைத்தும் சாத்தியம்” என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எத்தனையோ துறைகள் இருந்தாலும், நான் என் கையில் வைத்திருக்கக்கூடிய துறை இந்த மாற்றுத்திறனாளிகள் துறை என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

இந்தத் துறையை நான் வைத்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னால் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய துறையை நான் வைத்துக்கொண்டிருக்கிறேன் என்று பொருள். தலைவர் கலைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மீது நீங்காத பற்றும், பாசமும் கொண்டவர். உடல் ஊனமுற்றோர் என்ற சொல்லே, அவர்களை நோகடிக்கும் சொல்லாக இருந்த காரணத்தால் தான், அதனை மாற்றி - மாற்றுத்திறனாளிகள் என்ற தன்னம்பிக்கைச் சொல்லை உருவாக்கிக் கொடுத்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காகத் தனித் துறையை உருவாக்கினார். உருவாக்கினது மட்டுமல்ல, தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்து பல்வேறு திட்டங்களை அதற்காக உருவாக்கித் தந்திருக்கிறார்.

“மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய அரசுதான் திமுக அரசு” : முதல்மைச்சர் பெருமிதம்!

தொழுநோய் இரவலர் மறுவாழ்வுத் திட்டம்,

கண்ணொளி வழங்கும் திட்டம்,

மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், அலுமினியத் தாங்கிகள் உள்ளிட்ட கருவிகள் வழங்கும் திட்டம்,

மாத ஓய்வூதியத் திட்டம்,

பராமரிப்பு உதவித்தொகை,

திருமண உதவித்தொகை,

அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை,

கல்வி உதவித்தொகை,

கல்லூரிகளில் கல்விக் கட்டணம்,

சிறப்புக் கட்டணம்,

தேர்வுக் கட்டணம் ரத்து

இப்படி பல்வேறு திட்டங்கள் இன்று அமலில் இருக்கிறது என்று சொன்னால், இவை அனைத்தையும் உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அந்த வகையில் இன்னும் சிறப்பு கவனம் எடுத்து, நாம் நல்ல முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த ஆட்சி அமைந்த போது கொரோனா என்ற பெருந்தொற்று பரவி இருந்தது. அந்தச் சூழலில், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக தடுப்பூசி மையங்களில் தனியாக ஒரு பிரிவு, தனி வரிசை, சாய்வுதள வசதி உருவாக்கி தடுப்பூசி முகாம்களை நடத்தியிருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், வீட்டிற்கே சென்று தடுப்பூசியைச் செலுத்தி, கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இந்த அரசு மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல், அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவித்தோம். அவர்களுக்கு உயர் கல்வி நம்பிக்கையை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம். கொரோனா தொற்று நேரத்தில், மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று அத்தியாவசியப் பொருட்களையெல்லாம் வழங்கியிருக்கிறோம்.

அரசினுடைய ரிக்கார்டுகளில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமன்றி, பதிவு செய்யப்படாத மாற்று திறனாளிகளுக்கும் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திய அரசுதான் இந்த அரசு.

இதனுடைய தொடர்ச்சியாக இந்த ஓராண்டு காலத்தில், எத்தனையோ அரிய பணிகள் மாற்றுத்திறனாளிகளின் நன்மைக்காக நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்த காத்திருப்போர் பட்டியலிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்க ரூபாய் 62 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நான் அறிவிப்பு செய்தேன்.

70 கோடியே 76 லட்சம் ரூபாயில், 37,660 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

1,228 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரூபாய் 360 கோடியே 21 லட்சம் அளவுக்கு 2,11,505 பயனாளிகளுக்குப் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் ஒரு உதவியாளர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென நமது நாட்டில் மட்டுமன்றி, உலகிலேயே முன்மாதிரி திட்டமாக ரூ. 1,709 கோடி செலவில் “RIGHTS” – அதாவது “உரிமைகள்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காகச் சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில அளவிலான விருதும் வழங்கப்படுகிறது. தொழுநோயால் பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்விற்கான மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்தில், ரூபாய் 1 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நூல் கட்டுநர் மற்றும் நூல் கட்டும் உதவியாளர் பணியிடங்களுக்குப் பார்வைக் குறைவுடைய 31 நபர்கள் சிறப்பு நேர்வாகப் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

“மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய அரசுதான் திமுக அரசு” : முதல்மைச்சர் பெருமிதம்!

அறநிலையத்துறையின்கீழ் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணத் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இப்படி ஓராண்டில், மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திட பல்வேறு நலத்திட்டங்களை நாம் அறிவித்து இருக்கிறோம்.

தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்தபோது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன்னுடைய கையில் வைத்துக்கொண்டு எவ்வாறு பணியாற்றினாரோ, அதே வழியில் நின்று, இன்றைக்கு நானும், இந்த அரசும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பான சேவை வழங்கியமைக்காக, தமிழ்நாடு முதல் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களால், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான 03.12.2021 அன்று தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கிய வகையில் இந்தியாவிலேயே சேலம் மாவட்டம் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பாகச் செயல் புரிந்தமைக்காக இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு விருது

என இந்த “முப்பெரும் விருதுகளை” குடியரசுத் தலைவர் அவர்களின் கையால் பெற்ற மாநிலம் தான் நம்முடைய மாநிலம். மாநிலத்திற்கான விருதைப் பெற்று, சமூகநலத்துறை அமைச்சர் அவர்கள் கோட்டைக்கு வந்து என்னிடத்தில் அதை வழங்கினார். அந்த விருதைப் பெறும் போது, மிகப் பெருமையாக எனக்கு இருந்தது. இத்தோடு நிற்காமல் மேலும், நாம் முன்னேற்றம் காண வேண்டும் என்று தோன்றியது. நாம் ஒவ்வொரு வருடமும் இந்த விருதுகளைப் பெற வேண்டும், அதுதான் என்னுடைய விருப்பம்.

இந்தத் துறையானது ஸ்கூட்டர் கொடுத்தோம், கருவிகளைக் கொடுத்தோம், நிதி கொடுத்தோம் என்று மட்டும் சொல்லாமல், நம்பிக்கையும் கொடுத்தோம் என்று சொல்லும் அந்த அளவுக்கு இந்தத் துறை செயல்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய நம்பிக்கையை உருவாக்குவது சாதாரணமான காரியம் அல்ல, அதற்கு இந்தத் துறையில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் முதல் சாதாரண அலுவலர் வரைக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியை ஆற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

துறையை நோக்கி வருபவர்கள் சிலர் தான். அந்த சிலரது கோரிக்கைகளை செவி மடுத்துக் கேட்க வேண்டும். உடனடியாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், சில வாரங்களுக்குள்ளாவது நிறைவேற்றித் தர வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு நம்பிக்கை இந்த அரசாங்கம் தான். அந்த நம்பிக்கையை துறை அதிகாரிகளும், அலுவலர்களும் தான் காப்பாற்ற வேண்டும். இன்றைக்கு இந்தத் துறையில் சிலவற்றில் நாம் இன்னும் அதிக கவனம் செலுத்தி, மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

UDID அட்டைகள் வழங்குவதில் கொஞ்சம் சுணக்கம் தெரிகிறது. அது உடனடியாக நீக்கப்பட்டு, கார்டு வழங்குவது விரைவுபடுத்தப்பட வேண்டும். அனைத்து திட்டங்களின் பயன்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு தங்குதடையின்றி சென்றிட, ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை அளிப்பதில் சுகாதாரம், குழந்தைகள் நலத்துறை, கல்வித்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நலத்திட்டங்களை கொடுப்பதோடு, மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும். பின்னடைவுப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதோடு, தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்காக நல வாரியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான மாநில அளவிலான ஆலோசனை வாரியம் போன்றவற்றின் கூட்டங்களை அடிக்கடி நடத்தி, மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை இதுவரை எந்த அரசும் உருவாக்காத அத்தியாயத்தை உருவாக்கிட வேண்டும் என்று இத்துறையின் அமைச்சர் என்ற முறையிலும் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், மாற்றுத்திறனாளிகளை கை தூக்கி விடும் துறையாக இந்தத் துறை செயல்பட வேண்டும்.

அனைத்து துறை வளர்ச்சி - அனைத்து மக்களின் வளர்ச்சி - என்ற திராவிட மாடலுக்குள் இது போன்ற விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் தான் அடங்கி இருக்கிறது.

அவர்களது அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களது மகிழ்ச்சியில் தான், என்னுடைய மகிழ்ச்சி, இந்த அரசாங்கத்தினுடைய மகிழ்ச்சி இருக்கிறது. ஏன், இந்தத் துறையில் பணியாற்றும் அனைவரின் மகிழ்ச்சியும் இருக்கிறது என்று கூறி, இந்த அளவோடு என் உரையை நிறைவு செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories