சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தங்கசாலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு சுடரொளி சொல்லரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன், "வரலாற்றிலேயே 50 ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர், உலகத்திலேயே கலைஞர் மட்டும்தான். அண்ணாவைப் பற்றி தினமும் பேசாமல் கலைஞர் இருந்ததில்லை.
மருத்துவமனையில் இருந்தபோது கூட அண்ணாவின் பெயரை உச்சரித்தவர். தந்தை, தாய் எல்லாமான தலைவர் கலைஞர். இனி ஒரு தலைவன் இடத்தில் நான் 50 ஆண்டுக் காலம் இருப்பேனா என்று தெரியாது.
இன்றைக்கு நான் அவரது மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருக்கிறேன் என்றால் அந்த தலைவனுக்கு நான் செய்ய வேண்டிய நன்றியை எல்லாம் அவரது மகனுக்குச் செய்துவிட்டுப் போகவேண்டும் என்பதற்காகத்தான். அவரைவிட நான் வயதில் மூத்தவன். அனுபவத்தில் மூத்தவன். இருந்தாலும் அவர் தலைவர் நான் தொண்டன்" என தெரிவித்துள்ளார்.