தமிழ்நாடு

“அவர் எனக்கு உதவியாளராக வரனும் என கலைஞர் சொன்னார்” : சண்முகநாதன் இல்லவிழாவில் முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு!

“என்னுடைய பேச்சைக் குறிப்பெடுத்தானே, அவன் எனக்கு உதவியாளராக வரணும்” என்று கலைஞர் அவர்கள் உடனடியாகச் சொன்னார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுக்கூர்ந்தார்.

“அவர் எனக்கு உதவியாளராக வரனும் என கலைஞர் சொன்னார்” : சண்முகநாதன் இல்லவிழாவில் முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (15.05.2022) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் செயலாளர், நினைவில் வாழும் சண்முகநாதன் அவர்களின் பேரன் டாக்டர் ஆர். அர்விந்ராஜ் – வி. பிரியதர்ஷினி ஆகியோரது திருமணத்திற்குத் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி ஆற்றியாற்றினர்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எனது ஆருயிர் அண்ணன் சண்முகநாதன் அவர்களது பேரன் மணமகன் மருத்துவர் ஆர்.அர்விந்ராஜ் அவர்களுக்கும் – மணமகள் வி.பிரியதர்ஷினி அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நடந்தேறி இருக்கிறது. இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மணவிழாவை நடத்தி வைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். வாய்ப்பினை எனக்கு உருவாக்கித் தந்திருக்கும் மணமக்களுக்கும் மணமக்களின் குடும்பத்தாருக்கும் முதலில் நான் நன்றி செலுத்த விரும்புகிறேன்.

நம்முடைய சண்முகநாதன் அவர்களைப் பற்றி, மணமக்களை வாழ்த்தியவர்கள் எல்லோரும் எடுத்துச் சொன்னார்கள். அவரைப் பற்றி நான் அதிகம் உங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவரைப் பற்றி அறிந்தவர்கள் நீங்கள், புரிந்தவர்கள் நீங்கள். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். 'கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதை'. அதுபோலத்தான் அது அமைந்துவிடும். இருந்தாலும் நான் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் நான் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

“அவர் எனக்கு உதவியாளராக வரனும் என கலைஞர் சொன்னார்” : சண்முகநாதன் இல்லவிழாவில் முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு!

நம்முடைய கவிப்பேரரசு அவர்கள் இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்கள். சண்முகநாதன் அவர்களுக்கு 1971-ஆம் ஆண்டு மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அந்த மணவிழா நடந்தது. இன்றைக்குக் கலைவாணர் அரங்கமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கக் கூடிய அன்றைய பாலர் அரங்கம் அது புதுப்பிக்கப்பட்டு, கலைவாணர் அரங்கமாகப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு, முதல் நிகழ்ச்சி எந்த நிகழ்ச்சி என்றால் சண்முகநாதன் அவர்களது நிகழ்ச்சிதான் அங்கு நடைபெற்றது.

அப்போது, சண்முகநாதன் அவர்களுக்கு நானும், நான் மட்டுமல்ல, என் அண்ணன் அழகிரி அவர்களும், அதேபோல என் குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அனைவரும் மாப்பிள்ளைத் தோழர்களாக அன்றைக்கு இருந்து அந்தத் திருமண விழாவை நடத்தி வைக்கக் கூடிய ஒரு வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அந்த அளவுக்கு அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தவர். அவரைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அவரை யாரும் தலைவருடைய செயலாளர் என்று அழைக்க மாட்டோம். அப்படிப் பார்த்ததும் இல்லை. எங்களுடைய குடும்பத்தில் ஒருவராகத்தான், கலைஞருக்கு நான் எப்படி ஒரு மகனாக இருக்கிறேனோ அதுபோல சண்முகநாதனும் ஒரு மகனாகத்தான் கடைசி வரையில் இருந்து வந்திருக்கிறார்.

அவரை எல்லோரும் "குட்டி பி.ஏ, குட்டி பி.ஏ" என்றுதான் அழைப்போம். ஏனென்றால் அவர் முதன்முதலாகப் பணியில் வந்தபோது, ஒரு ஒடிந்த ஒல்லியான ஒரு உருவம், அதனால் அவரை எல்லோரும் செல்லமாக, பாசமாக, பெரியவர்கள் மட்டும் அல்ல, எங்களைப் போன்றவர்கள் மட்டுமல்ல, எனக்குப் பிறந்திருக்கக் கூடியவர்களும் கூட அவரைக் குட்டி பி.ஏ, குட்டி பி.ஏ என்றுதான் அழைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறப்புக்குரிய இடத்தில் இருந்து அவர் பணியாற்றியிருக்கிறார்.

அவர் கலைஞர் அவர்களிடத்தில் எப்படி உதவியாளராக வந்து சேர்ந்தார் என்றால், எதிர்க்கட்சியாகத் தி.மு.க இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நம்முடைய அறிஞர் அண்ணாவாக இருந்தாலும் தலைவர் கலைஞர் அவர்களாக இருந்தாலும், யார் எங்கே போய்க் கூட்டம் பேசினாலும் அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்கள் காவல்துறையில் இருந்து ஒற்றர்களை அனுப்பி வைப்பார்கள். அவர்களுடைய பேச்சுகளை எல்லாம் ரகசியமாக இருந்து அதைக் குறிப்பெடுத்து அரசுக்கு அனுப்பி வைக்கணும். அதற்கு ஒரு டிப்பார்ட்மெண்ட் இருக்கிறது. ரகசியத்துறை என்று சொல்லுவோம். அங்கே சில ஒற்றர்கள் பணியாற்றிக் கொண்டு இருப்பார்கள். அது காவல்துறைக்குக் கட்டுப்பட்டது. அந்தப் பணியில்தான் சண்முகநாதன் பணியாற்றிக் கொண்டு இருந்தார்.

முதன்முதலில் அவருடைய பணி என்பது, எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் யார் பேசினாலும் அங்கே போய்க் குறிப்பெடுக்கிற அந்தத் துறையில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது கலைஞர் அவர்களுடைய கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அங்கே சண்முகநாதன் அவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து ரகசியமாகக் குறிப்பெடுப்பார். அப்படிக் குறிப்பெடுத்து அனுப்பிய அந்தச் செய்தி, கலைஞருக்குத் தெரிந்தது. ”பரவாயில்லை, நம்முடைய பேச்சைத் தப்பில்லாமல், பிரச்சினையில்லாமல், அப்படியே முழுதாகச் சிறப்பாக அதைக் குறிப்பெடுத்து அனுப்புகிறார் என்று சொன்னால், அதற்கு சண்முகநாதன்தான் காரணம் என்று நினைக்கிறபோது நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்” என்று கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு.

“அவர் எனக்கு உதவியாளராக வரனும் என கலைஞர் சொன்னார்” : சண்முகநாதன் இல்லவிழாவில் முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு!

அதைத் தொடர்ந்து 1967-இல், நாம் வெற்றி பெற்றோம். அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றோம். அப்போது அண்ணா தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சராக, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். அப்போது யார் யார் அவர்களுக்கெல்லாம் உதவியாளர்களாக வரவேண்டும் என்று தேர்வு செய்தபோது, அப்போது மறக்காமல் தலைவர் கலைஞர் அவர்கள், அதிகாரிகளிடத்தில் ஒன்றைச் சொன்னார். பக்கத்தில் நாங்கள் எல்லாம் இருந்து அதனைக் கேட்டோம். “யாரை உதவியாளராக நியமிக்கிறோமோ இல்லையோ, நான் எதிர்க்கட்சியாக இருந்து பணியாற்றியபோது, என்னுடைய பேச்சைக் குறிப்பெடுத்தானே, அவன் எனக்கு உதவியாளராக வரணும்” என்று கலைஞர் அவர்கள் உடனடியாகச் சொன்னார்கள்.

அதற்குப் பிறகு, பணியில் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, “உங்கள் விடுப்பை கேன்சல் செய்துவிட்டு உடனே வாங்க, பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக் கூடிய கலைஞர் அவர்கள் உங்களை அழைக்கிறார்” என்று அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். அன்றில் இருந்து தலைவர் கலைஞர் அவர்கள் மறைகிற வரையில், தலைவரோடு ஒன்றிப் பிணைந்து இருந்தவர் நம்முடைய சண்முகநாதன் அவர்கள்.

நாங்கள் எல்லாம் கூட அப்பா என்ற முறையில் தலைவர் கலைஞரிடம் அதிகம் பேசியது கிடையாது. ஆனால் சண்முகநாதன்தான் அதிகம் பேசியிருக்கிறார். தலைவர் கலைஞரும் அவரிடத்தில்தான் அதிகம் பேசியிருக்கிறார். நிறைய திட்டு வாங்குவார். திட்டு வாங்கிவிட்டு, கோபித்துக்கொண்டு இரண்டு நாள் வரமாட்டார். அதற்குப் பிறகு தானாக வந்துவிடுவார். இப்படிப் பல ஊடல்கள் தலைவருக்கும் சண்முகநாதனுக்கும் அடிக்கடி நடந்திருக்கிறது. அதையெல்லாம் நான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன்.

தலைவர் மறைந்த பிறகும் தொடர்ந்து கோபாலபுரத்துக்கு வந்துகொண்டிருந்தார். கலைஞர் இருந்தபோது உதவியாளராக இருந்து பணியாற்றுவது என்பது வேறு. கலைஞர் நம்மையெல்லாம் ஆறாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்தபோதும், தொடர்ந்து கோபாலபுரம் வீட்டில் வந்து உட்கார்ந்து, எப்படி, கலைஞர் இருந்தபோது பணியாற்றினாரோ, அதேபோல அந்த வீட்டுத் திண்ணையில் ஒரு shed போல, ஒரு கூண்டு மாதிரி அது இருக்கும், அங்கேதான் உட்கார்ந்து type அடிப்பார். Shorthand எடுப்பார்.

தலைவர் கலைஞரின் பேச்சையெல்லாம் அவர் type பண்ணும்போது, நான் போய்ப் பக்கத்தில் உட்கார்ந்துகொள்வேன். அதைத் தட்டச்சு செய்து என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார். “எங்கேயாவது தப்பிருக்கிறதா என்று கண்டுபிடிச்சி சொல்லு” என்று கொடுப்பார். நான் முழுவதும் படிப்பேன். கலைஞருடைய பேச்சுகள் எல்லாம் ஊடகங்களுக்குப் போவதற்கு முன்பே, அவர் type பண்ணி என்னிடத்தில்தான் காட்டுவார். நான் அதைப் படித்துப் பார்ப்பது உண்டு. அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

அதுமட்டுமல்ல எங்களோடு, கோபாலபுரத்தில் இருக்கிற சில இளைஞர்களோடு, நாங்கள் எல்லாம் அந்தத் தெருவில் கிரிக்கெட் விளையாடுவோம். அப்போதும் அதிலும் வந்து கலந்துகொண்டு அவர் கிரிக்கெட் விளையாடியதையெல்லாம் நான் இன்று நினைத்துப் பார்க்கிறேன். அவர் மறைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, உடல் நலிவுற்று, அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை. வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய ஒரு கட்டாயம். அந்த நிலையில் இருந்தபோது, அடிக்கடி நான் அவர் வீட்டுக்குப் போய், மருத்துவமனைக்குப் போய் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வருவது உண்டு.

“அவர் எனக்கு உதவியாளராக வரனும் என கலைஞர் சொன்னார்” : சண்முகநாதன் இல்லவிழாவில் முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு!

அப்போது கொரோனா காலமாக இருந்ததால், நான் காணோலிக் காட்சி மூலமாகத்தான் பொதுமக்களோடு, கழகத் தோழர்களோடு, கழக அமைப்புகளோடு, நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடிய அந்த முறையைப் பின்பற்றிக் கொண்டு இருந்தேன். அப்போதெல்லாம் அந்தப் பேச்சுகளை எல்லாம் டிவியில், அவர் பார்த்துவிட்டு, முடிந்தவுடனே, முதல் போன் அவருடைய போனாகத்தான் இருக்கும். “தம்பி, உன் பேச்சைப் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதெல்லாம் பார்க்கிறதுக்கு அப்பா இல்லையே, தலைவர் இல்லையே” என்று அழுதுகொண்டே பேசுவார். அந்த அளவுக்கு என்மீது பாசம் – இன்றைக்கு நான் எல்லாம் இந்த அளவுக்கு ஒரு முன்னேற்றத்தை, மற்றவர்கள் பாராட்டக் கூடிய அளவுக்கு பெருமை பெற்றிருக்கிறேன் என்றால், அதற்கு முக்கியமான காரணகர்த்தாக்களில் சண்முகநாதனும் ஒருவர் என்பதை நான் என்றைக்கும் மறந்துவிட மாட்டேன்.

இந்தத் திருமணத்துக்குக் கூட, இங்கே அவருடைய மகன் நன்றியுரை ஆற்றுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார், சண்முகநாதன் அவர்கள் என்னிடத்தில் இந்தத் தேதியைக் கேட்டபோது, “நீங்கள் எதுக்கு என்னிடத்தில் தேதி கேட்கிறீர்கள்? நீங்கள் என்ன தேதி சொல்கிறீர்களோ அன்றைக்கு நான் வருகிறேன்” என்று நான் சொன்னேன். அந்தத் தேதியைச் சொல்லிவிட்டு, ”நான் இருப்பேனோ இல்லையோ, நீ வந்து இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கணும்” என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.

அவர் சொன்னபடியே, திருமணத்துக்குத் தேதி வாங்கினாரே தவிர, அந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளும் சூழ்நிலை இல்லாமல் அவர் மறைந்துவிட்டார் என்று எண்ணிப் பார்க்கிறபோது நான் வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். கலைஞருடைய எழுத்துகளை, உணர்வுகளை அப்படியே டைப் செய்து இன்றைக்கு “கலைஞர் கடிதங்கள், நெஞ்சுக்கு நீதி” புத்தகங்கள் எல்லாம் நாடு முழுவதும் பரவியிருக்கிறதென்றால், கலைஞர் எழுதினார், கலைஞர் சில நேரங்களில் எழுத முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டபோது, அதை வார்த்தைகளால் சொல்லுவார்.

அதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு அதை அப்படியே அச்சு பிசகாமல், தலைவர் அவர்கள் எந்த உணர்வோடு எழுதியிருப்பாரோ, அதை அப்படியே டைப் செய்து இன்றைக்கு அந்தப் புத்தகங்கள் எல்லாம் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், எல்லோருடைய கையிலும் தவழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம் நம்முடைய சண்முகநாதன்தான் என்பதை நான் இந்த நேரத்திலே பெருமையோடு எடுத்துச் சொல்லி, ஆகவே, இந்த நேரத்தில் உங்களைக் கேட்டுக்கொள்வது, எப்படித் தலைவரோடு இணைபிரியாமல், கடைசி வரையில் அந்தக் குடும்பத்தோடு வாழ்ந்து காட்டியிருக்கிறாரோ, அதே போல நாமும் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில், இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கக் கூடிய, நம்முடைய கழக ஆட்சிக்கு நீங்கள் பக்கபலமாக இருந்து துணைநிற்க வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக்கொண்டு, அவருடைய வீட்டு விளக்கு இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கிறது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக் கூடிய வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்குத் தொண்டர்களாக இருந்து, மணமக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்

banner

Related Stories

Related Stories