தமிழ்நாடு

"திறன்மிகு பயிற்சி அளித்து சிறந்த பொறியாளர்களை மேம்படுத்துவதே தொழில்துறையின் வெற்றி" : முதல்வர் பேச்சு!

“கல்வியும், தொழிலும், உற்பத்தியும் இணைந்து செயல்படுவது தமிழ்நாடு சிறப்பிடம் பெற வழிவகுக்கும்.” என 'TechKnow 2022' நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

"திறன்மிகு பயிற்சி அளித்து சிறந்த பொறியாளர்களை மேம்படுத்துவதே தொழில்துறையின் வெற்றி" : முதல்வர் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“எந்தத் துறையினாலும் தனித்துச் செயல்பட முடியாது. ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் சிறப்பாகச் செயல்பட முடியும். கல்வியும், தொழிலும், உற்பத்தியும் இணைந்து செயல்படுவது தமிழ்நாடு சிறப்பிடம் பெற வழிவகுக்கும்.” என 'TechKnow 2022' நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“TechKnow-2022” கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆற்றிய உரை வருமாறு:

"நான் முதல்வராக பொறுப்பேற்றப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கக்கூடிய மூன்றாவது நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. தொழில் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறேன். அதைத்தொடர்ந்து உயர்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறேன்.

இப்போது “நான் முதல்வன்” நிகழ்ச்சி என்ற அடிப்படையிலே இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியிலே நான் பங்கு பெறக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். இந்த வாய்ப்பை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பினை உருவாக்கி தந்திருக்கக்கூடிய அனைவருக்கும் இந்த நேரத்திலே நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

அருமை யுடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

அனைவர்க்கும் முதலில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அனைத்திந்திய உற்பத்தியாளர் சங்கம்- அண்ணா பல்கலைக் கழகம் - இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு இந்த மூன்றும் ஒருங்கிணைத்து பொறியாளர்களின் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கத்தையும் கண்காட்சியையும் நீங்கள் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்துள்ளீர்கள்.

உங்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை, இந்த செயலில் ஈடுபட்டு இருக்கக்கூடிய அனைவருக்கும் முதலில் நான் என்னுடைய நன்றியை, வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இத்தகைய ஒருங்கிணைப்பு மிகமிக தேவை, மிகமிக அவசியம். எந்தத் துறையாக இருந்தாலும் அந்த துறை தனித்துச் செயல்பட முடியாது. ஒன்றோடு ஒன்று ஒற்றுமை கலந்திருக்கக்கூடிய உணர்வோடு அதிலே நாம் ஈடுபட்டால் தான் அதில் வெற்றி காண முடியும், அதனை நிறைவேற்ற முடியும். தனித்தனியாக தங்களது சக்தியைச் செலவிடுவதைவிட தேவையான நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அந்த செயல் விரைவாகவும் முடியும், சிறப்பாக முடிய வாய்ப்பு ஏற்படும்.

பலநேரங்களின் துறைகளுக்குள் அத்தகைய ஒருங்கிணைப்பு இருப்பது இல்லை என்பது உண்மைதான். அதை நாம் ஏற்றுக் கொண்டாகத்தான் வேண்டும். அதனை அதிகாரிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

இத்தகைய நிலைமை இருக்கும் காலத்தில் கல்வியும் - தொழிலும் - உற்பத்தியும் இணைந்து செயல்படுவது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது.

* வேலை இல்லை என்று ஒரு பக்கம் இளைஞர்கள் சொல்கிறார்கள்.

* வேலை இருக்கிறது, ஆனால் அதற்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று தொழில் நிறுவனங்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும். அதற்கு இத்தகைய கருத்தரங்குகள் நிச்சயம் பயன்படப் போகிறது.

எத்தகைய தகுதியை இளைஞர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்று நிறுவனங்கள் சொல்லியாக வேண்டும்.

அத்தகைய தகுதியை இளைஞர்களுக்கு ஊட்டுவதாக பல்கலைக் கழகங்கள் மாற வேண்டும்.

இந்த பரஸ்பர நட்புறவு உங்களுக்குள் இருக்க வேண்டும். அதனை அரசு அதிகாரிகள் உணர்ந்திருப்பதன் வெளிப்பாடு தான் இது போன்ற கருத்தரங்குகள்.

தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும், முதன்மை மாநிலமாக உருவாக்க சீரிய முயற்சிகளை மேற்கொண்டு, சிறப்பான திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி கொண்டு வருகின்றது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

"திறன்மிகு பயிற்சி அளித்து சிறந்த பொறியாளர்களை மேம்படுத்துவதே தொழில்துறையின் வெற்றி" : முதல்வர் பேச்சு!

நான் கூட பல இடங்களில், பல நிகழ்ச்சிகளில் ஒன்றை நான் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டுவதுண்டு. சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. இந்தியாவில் இருக்கக்கூடிய முதலமைச்சர்களில் யார் முதலிடத்தில் இருக்கிறார்கள், இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள், மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள் என்று வரிசைப்படுத்தி ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தார்கள். அந்த கருத்துக் கணிப்பு எடுத்தபோது, 100 நாட்களிலேயே உங்களால் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய என்னுடைய பெயர் வந்தது. எல்லோரும் பாராட்டினார்கள். சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் உட்பட அனைவரும் என்னை பாராட்டிப் பேசினார்கள். எனக்கு இதில் ஒருபக்கம் பெருமை தான். அதை மறுக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் தாண்டி நம்பர் 1 முதலமைச்சர் என்று சொல்வதைவிட, நம்பர் 1 தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும். அதற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை எல்லாம் தொடர்ந்து நம்முடைய அரசு நிறைவேற்றி வருகிறது என்று உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும்.

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் என்பது அகில இந்திய அளவில் 27.1 விழுக்காடாக இருக்கிறது. ஆனால் தமிழகம் 51.4 விழுக்காடு பெற்று சிறப்பான இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு இந்த புள்ளிவிபரத்தை எடுத்தால் 54 விழுக்காடாக கூட கூடியிருக்கலாம்.

உயர்கல்வியில் அனைத்து மாணவர்கள் சேர்க்கை விகிதங்களிலும் தமிழகம் முதலிடம் பெற்று முன்னிலையில் இருக்கிறது.

உயர்கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் மொத்த மாணாக்கர்கள் சேர்க்கை விகிதத்தின் அதீத வளர்ச்சிக்கும், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவு மாணாக்கர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் சான்றாக உள்ளது.

* இலவச பாடப்புத்தகங்கள்,

* பேருந்து பயண அட்டை,

* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டம்,

* ஆதிதிராவிட மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம்,

* பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வி உதவித்தொகை,

*முதுநிலை பட்டமேற்படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை போன்றவைகள் தமிழகத்தில் வழங்கப்படுகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் முன்னுரிமை அடிப்படையில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கியதோடு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டு இருக்கிறது. நம்முடைய சாதனைக்கு சமூகநீதிக் கொள்கையும் முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.

பல்வேறு பன்னாட்டு தொழில்துறை நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் பொறியியல் பட்டதாரி மாணவர்கள் வளாகத் தேர்வுமூலம் உயர் நிலை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

"திறன்மிகு பயிற்சி அளித்து சிறந்த பொறியாளர்களை மேம்படுத்துவதே தொழில்துறையின் வெற்றி" : முதல்வர் பேச்சு!

தமிழக பொறியியல் மாணவர்களும் இயல்பிலேயே புதியதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்படவேண்டும் என்ற துடிப்பும், உணர்ச்சியும் உள்ளவர்கள். மேலும், தற்போதுள்ள நவீன தொழிலகங்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கொண்டு வரும் சவால்கள் ஆகியனவற்றை கண்டறியவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்ற பட்டதாரி மாணவர்களிடையே, தொழில்நுட்பத் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பெறுதலுக்கான திறன்களை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதில் முக்கியமான புதிய திட்டம்தான் “நான் முதல்வன்” என்ற திட்டம். நீங்கள் எதை தேர்ந்தெடுத்து, அதிலே வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதிலே முதல்வனாக வரவேண்டும் என்பதற்காகத் தான் நான் முதல்வன் என்று பெயரிட்டு அந்த திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் மாணவ, இளைஞர்களின் அறிவுச் சக்தியை மேம்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம் ஆகும்.

அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இத்திட்டத்தில் முழு மனதோடு கலந்துகொண்டு, மாணவர்களின் வளர்ச்சியினை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழகத்தில் உள்ள கல்வி மற்றும் தொழில்துறைகளின் வளர்ச்சி பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டு இருக்கிறது.

தமிழகம், கல்வித் துறையில் மேலும் உயரிய நிலையை அடைவதற்கு பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த இரண்டு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு திறன்மிகு பயிற்சி அளித்து ஒரு சிறந்த பொறியாளர்களை மேம்படுத்துவதே தொழில் துறையின் வெற்றி ஆகும். மேலும், தற்போதைய சூழலில் உள்ள தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பொறியியல் பட்டதாரி மாணவர்களை உருவாக்குவது இன்றியமையாததாக அமைந்திருக்கிறது.

அதற்கேற்ப அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து பொறியாளர்களின் மேம்பாடு தொடர்பான TECHKNOW-2022 என்ற கண்காட்சி மற்றும் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. இச்சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். TECHKNOW-2022-ன் நோக்கங்களைப் நான் படித்துப் பார்த்தேன்.உங்களது நோக்கங்கள் சிறப்பானதாக அமைந்துள்ளன.

"திறன்மிகு பயிற்சி அளித்து சிறந்த பொறியாளர்களை மேம்படுத்துவதே தொழில்துறையின் வெற்றி" : முதல்வர் பேச்சு!

➢ வளர்ந்து வரும் முக்கியத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இளைஞர்களை உருவாக்க நினைக்கிறீர்கள்.

➢ புதிய தொழில்முனைவோரை அடையாளம் காண நினைக்கிறீர்கள்.

➢ சுயவேலை வாய்ப்புக்கான சிறந்த யோசனை சொல்பவர்க்கு பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளீர்கள்.

➢ இதில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு கல்லூரியை விட்டு வெளியேறும் போது வேலையும் செல்ல வழிவகை செய்துள்ளீர்கள்.

➢ மேலும் புதிய தொழில்நுட்பங்களும், புதிய தொழில்நிறுவனங்களும், ஆதரவு அளிக்கின்ற கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கண்காட்சியில் வைப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய கருத்தரங்குகள், போட்டிகள், திறமைவளர்க்கும் கண்காட்சிகள் மூலம் மாணவர்களை ஊக்குவிப்பதுடன், வருங்காலத்தில் தொழிற்திறன் வாய்ந்த மனிதவளம் மேன்மேலும் அதிகரிக்கவும், பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் என நான் நம்புகிறேன்.

இந்த இனிய விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்து, உங்களுடைய எண்ணம் ஈடேற, நிறைவேற இந்த அரசுக்கு இன்னும் பல பெருமைகள் வந்துசேர, அதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள், மாணவர்கள் பெரும் வெற்றியை பெறுவதற்கு, அவர்கள் வாழ்விலே எல்லா வசதிகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக் தரக்கூடிய வகையிலே இந்த கருத்தரங்கமும், பயிற்சியரங்கவும் நடைபெற்று இருக்கிறது என்று சொல்லி, இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி, இதை எழுச்சியோடு ஏற்பாடு செய்து தந்திருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், அரசின் சார்பில் தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி சொல்லி, எனது உரையை நிறைவு செய்கிறேன்."

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories