தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம்.. சென்னை அருகே மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி.. முதல்வர் அறிவித்த அசத்தல் திட்டங்கள்

விளையாட்டுத் துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம்.. சென்னை அருகே மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி.. முதல்வர் அறிவித்த அசத்தல் திட்டங்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கலான பிறகு, மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இரண்டாம் கட்டமாக பேரவையில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்றைய கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் விளையாட்டு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அப்போது அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:-

”மனித சக்தி என்பது உடல் வலிமையும் உள்ளத்தின் வலிமையும் இணைந்தது. அவர்களால் மட்டுமே அனைத்து துறைகளிலும் வெற்றியாளர்களாக மாற முடியும்.

ஒரு சமுதாயத்தின் வலிமை அந்த சமுதாய மக்களின் மன மற்றும் உடல் வலிமையை பொருத்தது. விளையாட்டு மனதிற்கு புத்துணர்ச்சி தருகிறது. வெற்றியோ தோல்வியோ இரண்டும் ஒன்றுதான் என்ற மனப் பக்குவத்தை விளையாட்டு உருவாக்குகிறது. விளையாட்டு கூட்டு மனப்பான்மையை உருவாக்குகிறது.

விளையாட்டுத் துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு, குழு போட்டிகளிலும், தனித்திறன் போட்டிகளிலும் தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது.

ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்கி வீரர்களை அரசு ஊக்குவித்து வருகிறது. சென்னைக்கு அருகில் Mega Sports City அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வடசென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய குத்துச்சண்டை வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் தேடுதல் என்ற திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னையை 4 மண்டலங்களாக பிரித்து 4 மண்டலங்களிலும் ஒலிம்பிக் அகடமி அமைக்கப்படும்.

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ.3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்பட உள்ளது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது.

சிலம்பம் விளையாட்டை ஊக்கப்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்த, பீச் வாலிபால் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் புதிய முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும். தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும் வாய்ப்புகளும் ஏற்படும்.

தமிழ்நாடு பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியுள்ளது. 44வது உலக மெஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பிரம்மாண்டமாக தமிழக அரசால் நடத்தப்பட உள்ளது.

180 நாடுகளை சார்ந்த சதுரங்க வீரர்கள் அதில் பங்குபெற உள்ளனர். இதற்காக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்த அரசு முனைப்புடன் செயல்படும்.”

banner

Related Stories

Related Stories