கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு நாளை ஆஜராகுமாறு ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு தனிப்படை போலிஸார் சம்மன் அனுப்பிள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் காவலாளி ஓம்பகதூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து சூலூர்மட்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடைபெறவேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தனிப்படை காவல்துறையினர் விசாரணையில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 202 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாட்சியங்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. எலக்ட்ரானிக் எவிடன்ஸ் செல்போன் உரையாடல்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், வழக்கின் கூடுதல் சாட்சியங்கள் இடையே விசாரணை நடத்த அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் மூலம் கோவை காவல்துறையினர் பயிற்சி கல்லூரியில் கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.கவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை காவல்துறையினர் சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொலை கொள்ளை வழக்கில் கார் விபத்தில் உயிரிழந்த கனகராஜன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.