சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பினு. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மாங்காடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட ரவுகள் ஒன்று சேர்ந்து பினுவின் பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது, பினு அரிவாளால் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாக தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். பின்னர் பினு போலிஸாரிடம் சரணடைந்தார். பிறகு 'நான் திருந்தி வாழ போவதாக' வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
இதையடுத்து பினையில் வெளியே வந்த பினு, மாமூல் வாங்குவது, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் இரண்டு முறை போலிஸார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜாமினில் வெளியேவந்து பினு தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி ஆர்டர் செய்த செல்போனை கொடுக்க டெலிவரி பாய் ஒருவர் பினுவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பினு, அவரை அடித்து முட்டிபோட வைத்து சித்தரவதை செய்துள்ளார். செல்போனையும், அவர் வைத்திருந்த பணத்தையும் பறித்து கொண்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து பினுவை தேடி வந்தனர். இந்நிலையில், பினு தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.