தமிழ்நாடு

”இதற்குமேலும் இந்தியா..?தாங்குமா இந்தியா..?” : அமித்ஷாவின் பேச்சுக்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம்!

அமித்ஷாவின் இந்தி திணிப்பு பேச்சுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

”இதற்குமேலும் இந்தியா..?தாங்குமா இந்தியா..?” : அமித்ஷாவின் பேச்சுக்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த திணிப்பு முயற்சியை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வலுவாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு அல்ல” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் #இந்தி_தெரியாது_போடா, #StopHindiImposition ஹேஷ்டேக்குகள் மீண்டும் ட்ரெண்டாகி வருகின்றன.

மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், பாரதிதாசனின் தமிழுக்கு அமுதென்று பெயர் என்ற கவிதையில் வரும் “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்” என்று பதிவிட்டு, ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய ஓவியத்தைப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள கவிதையில்,

வடக்கே வாழப்போன தமிழர்

இந்தி கற்கலாம்

தெற்கே வாழவரும் வடவர்

தமிழ் கற்கலாம்

மொழி என்பது

தேவை சார்ந்ததே தவிர

திணிப்பு சார்ந்ததல்ல

வடமொழி ஆதிக்கத்தால்

நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம்

இதற்குமேலும் இந்தியா?

தாங்குமா இந்தியா? எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories