தமிழ்நாடு

எரிபொருள் வரி.. 26 லட்சம் குடும்பங்களிடமிருந்து ₹1 லட்சம் வசூல் : மோடி அரசை அம்பலப்படுத்திய ப.சிதம்பரம்!

இந்தியாவில் உள்ள சுமார் 26 லட்சம் குடும்பங்களிடமிருந்து சராசரியாக தலா ரூ. 1 லட்சத்தை அரசு வசூல் செய்துள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வரி.. 26 லட்சம் குடும்பங்களிடமிருந்து ₹1 லட்சம் வசூல் : மோடி அரசை அம்பலப்படுத்திய ப.சிதம்பரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாட் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்தது. இதையடுத்து உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதால் 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் மக்களை உறுப்பினர் ராகுல் காந்தி, தேர்தல் முடிந்துவிட்டது பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என ஒன்றிய அரசை விமர்சித்திருந்தார். பொது மக்களும் எப்போது விலை உயரக்கூடும் என்ற அச்சத்திலேயே இருந்துவந்தனர்.

கடந்த 137 நாட்களுக்கு பிறகு தற்போது பெட்ரோல், டீசல் விலை தினசரி 76 பைசா உயர்த்தப்பட்டு வருகிறது. அதேவேளையில், நேற்று வழக்கம்போல் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்குப்பின், டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2,253 ஆக உள்ளது. சென்னையில் 2,406 ரூபாய் என்ற அளவில் உள்ளது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 ஆக உள்ளது.

ஏற்கனவே, கடந்த மாதம் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. தற்போது, வர்த்தக சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மீதான சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலையை தொடர்ந்து, விமானங்களுக்கு பயன்படும் எரிபொருள் விலையையும் ஒன்றிய அரசு 2 சதவீதம் உயர்த்தியுள்ளது. வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ஓட்டல் மற்றும் டீ கடைகளில் உணவுப்பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளின் விலையை அதன் உரிமையாளர்கள் உயர்த்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள சுமார் 26 லட்சம் குடும்பங்களிடமிருந்து சராசரியாக தலா ரூ. 1 லட்சத்தை அரசு வசூல் செய்துள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசு எரிபொருள் வரிகளாக மக்களிடம் இருந்து ரூ.26 லட்சத்து 51 ஆயிரத்து 919 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் சுமார் 26 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. இதை வைத்து பார்க்கும்போது, ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும் சராசரியாக தலா ரூ. 1 லட்சத்தை அரசு வசூல் செய்துள்ளது.

ஒரு சராசரி குடும்பத்திற்கு, இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன பெற்றுள்ளோம் என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories