தமிழ்நாடு

வாடகை வீட்டை குத்தகைக்கு விட்டு மோசடி.. பா.ஜ.க நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு - பின்னணி என்ன?

புதுச்சேரியில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டை உள்குத்தகைக்கு விட்டு மோசடி செய்த பா.ஜ.க. இளைஞரணி தலைவர் உள்பட 4 பேர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாடகை வீட்டை குத்தகைக்கு விட்டு மோசடி.. பா.ஜ.க நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 65). வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பாக்குமுடையான்பேட்டை அன்னை நகரில் உள்ள தனது வீட்டின் முதல்மாடியை உழவர்கரை மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி தலைவர் பிறைசூடன், பா.ஜ.க. நிர்வாகி செல்லபெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

அவர்களுடன் புவனா (36) என்பவரும் சேர்ந்து அங்கு தனியார் நிறுவனம் நடத்துவதாக கூறினர். நாளைடையவில் அந்த வீட்டில் கீழ் தளத்தையும் வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் அந்த வீட்டை சுந்தர் என்பவரிடம் உள்குத்தகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், பிறைசூடனிடம் வீட்டை காலி செய்யும்படி சுகுமாறன் கூறியுள்ளார். ஆனால் இதுவரை காலி செய்யவில்லை.

இந்நிலையில், சுகுமாறன் தனது வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது சுந்தர் என்பவர் அங்கு குடியிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கோரிமேடு போலிஸில் புகார் அளித்தார். பிறைசூடன், சுந்தர் ஆகிய 2 பேரும் போலியாக உடன்படிக்கை தயாரித்து வீட்டை அபகரிக்க முயற்சி செய்துள்ளதாவும், அவர்களுக்கு மோகன், புவனா ஆகியோர் உதவியாக இருந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புகாரின் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ஜ.க நிர்வாகிகள் பிறைசூடன், மோகன்ராஜ் ஆகிய 2 பேரும் ஏற்கனவே ஓய்வுபெற்ற போலிஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணியின் வீட்டை இதேபோல் வாடகைக்கு எடுத்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே கோரிமேடு போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று சிறையில் உள்ள அவர்கள் 2 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories