செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமட்டுநல்லூர் கன்னிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (65). இவர் அதே பகுதியில் எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் சரவணன் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் கன்னிவாக்கம் பகுதியில் உமாபதியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த கூடுவாஞ்சேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், உமாபதியின் மகன், தங்கைக்கு என கொடுக்கப்பட்ட சொத்திலும் பங்குவேண்டும் என தகராறில் ஈடுப்பட்டு வந்துள்ளார். கடந்த ஒருவாரத்திற்க்கு முன்பாக சரவணன் தகராறில் ஈடுபட்ட நிலையில் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் உமாபதி புகார் அளித்துள்ளார்.
ஆத்திரமைடைந்த சரவணன், தனது மனைவியின் உறவினரான வேளச்சேரியைச் சார்ந்த உதயகுமார் மற்றும் அவரது நண்பர்களான வேளச்சேரியைச் சார்ந்த விக்னேஷ், சேகர், செல்வம் ஆகியோருடன் சேர்ந்து உமாபதியை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
உமாபதியை கொலை செய்த அவரது மகன் சரவணன் உட்பட 5 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்துக்காக மகனே தந்தையைக் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.