தமிழ்நாடு

“முதற்படியில் வெற்றி பெற்றிருக்கிறோம்... விரைவில் முழு வெற்றி பெறுவோம்” : முதலமைச்சர் உறுதி!

“’இரண்டாவது முறை நான் அதைத் திருப்பி உங்களுக்கு அனுப்ப முடியாது. நான் குடியரசுத் தலைவருக்குத்தான் அனுப்பி வைக்கவேண்டும்’ என்று ஆளுநர் சொன்னார்.” என முதலமைச்சர் பேசினார்.

“முதற்படியில் வெற்றி பெற்றிருக்கிறோம்... விரைவில் முழு வெற்றி பெறுவோம்” : முதலமைச்சர் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திருவான்மியூரில் தி.மு.கழக முதன்மைச் செயலாளர் – அமைச்சர் கே.என்.நேரு இல்லத் திருமண விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நேற்றைய தினம் நமக்கு ஒரு செய்தி; முதல்கட்டமாக வெற்றிச் செய்தி கிடைத்திருக்கிறது. அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

ஏழை - எளிய - நடுத்தர மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்விற்கு விலக்கு பெற வேண்டும்; அதற்குச் சட்ட முன்வடிவைச் சட்டமன்றத்தில் இயற்றி நாம் ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம்.

பல மாதங்கள் அது கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு திடீரென்று ஒருநாள் அதைத் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்கள்.

அதனால் உடனடியாக அடுத்து சட்டமன்றத்தைக் கூட்டி மீண்டும் ஒரு தீர்மானத்தைப் போட்டு, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.

இது நேற்றுவரையில் எங்களுக்கு என்ன நிலையில் இருக்கிறது என்ற செய்தி கிடைக்கவில்லை. அதனால் நேற்றைய தினம் நான், நம்முடைய அண்ணன் துரைமுருகன் அவர்கள், பொன்முடி அவர்கள், தலைமைச் செயலாளர் அவர்கள் மற்றும் அதிகாரிகள் எல்லாம் ஆளுநரை சந்தித்து அந்தக் கோப்பைப் பற்றி விசாரித்தோம்.

விசாரித்தபோது அவர் என்ன சொன்னார் என்றால், ‘எனக்கும் சட்டம் தெரியும்; இரண்டாவது முறை நான் அதைத் திருப்பி உங்களுக்கு அனுப்ப முடியாது. நான் குடியரசுத் தலைவருக்குத்தான் அனுப்பி வைக்கவேண்டும் வேறு வழி கிடையாது’ என்று சொன்னார்.

எனவே முதற்படியில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இன்றைக்கும் சொல்கிறேன், விரைவில் அந்த நீட் தேர்வில் இருந்து இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

“முதற்படியில் வெற்றி பெற்றிருக்கிறோம்... விரைவில் முழு வெற்றி பெறுவோம்” : முதலமைச்சர் உறுதி!

நேற்றைக்குக் கூட நாடாளுமன்றத்தில் நம்முடைய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் இதுபற்றி விளக்கமாக - விரிவாகப் பேசி, அங்கு இருக்கும் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அது இன்றைக்குப் பத்திரிகைகளில் செய்திகளாக வந்திருக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஆட்சிக்கு, இந்த ஆட்சியின் அமைச்சரவையில் இடம்பெற்று, மிகச் சிறப்பாக பணியாற்றி, இந்த ஆட்சிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களில் ஒருவராக, நேரு அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்.” என உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories