டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கிலும் உண்மையை கொண்டு வருவோம் என வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.
சேலம் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்பட பத்து பேரை குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவர்களுக்கான தண்டனை விவரங்களை நேற்று முன்தினம் வெளியிட்டது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ப.பா.மோகன், இறுதிவரையில் போராடி நீதி பெற்றுத் தந்தார்.
இந்நிலையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் அமைந்துள்ள சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் சிலைக்கு, வழக்கறிஞர் ப.பா.மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் ப.பா.மோகன், “கோகுல்ராஜ் கொலை வழக்கில் கிடைத்த வெற்றி என்பது அம்பேத்கருக்கும், பெரியாருக்கும், சமூக நீதிக்கும் கிடைத்த வெற்றி.
இந்த வழக்கில் கிடைத்த வெற்றி என்னைப் போன்ற வழக்கறிஞர்கள் உருவாக வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு சமநீதி வேண்டும் என்பதில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும்.
காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கிலும் உண்மையை கொண்டுவருவோம். மேலும் விடுதலையான 5 பேரின் மீதும், சித்ரா சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.