தமிழ்நாடு

“வானிலை வரலாற்றில் இதுவே முதல்முறை..” : வெளுத்துக்கட்டப்போகும் மழை - வானிலை மையம் எச்சரிக்கை!

வானிலை வரலாற்றில் முதல்முறையாக மார்ச் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழக பகுதிகளை நெருங்குவதாக தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“வானிலை வரலாற்றில் இதுவே முதல்முறை..” : வெளுத்துக்கட்டப்போகும் மழை - வானிலை மையம் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வானிலை வரலாற்றில் முதல்முறையாக மார்ச் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழக பகுதிகளை நெருங்குவதாக தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், “நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் [தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை] புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

5ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

6ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

7ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

05.03.2022: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

06.03.2022: வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும், ஆழ்கடல் பகுதிகளில் உள்ள மீனவர்கள் உடனே கரை திரும்புமாறு அறிவுறுத்தினார்.

மேலும் தமிழகத்தில் அதிகனமழைக கான வாய்ப்பு இல்லை என்றும் வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புளளதாகத் தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் மழை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கடந்த 130 வருடங்களில் 5 புயல்களும் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வங்க கடலில் உருவாகி உள்ளது.

1938ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையும், 1994 ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமானையும் நெருங்கியது. இதுவரை இருக்கக்கூடிய வானிலை வரலாற்றின் அடிப்படையில் தமிழகத்தை நெருங்கும் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதுதான் என்றார்.

banner

Related Stories

Related Stories