தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு: விரைவில் அமைகிறது விசாரணை குழு;கிலியில் அதிமுகவினர் -அமைச்சர் நேரு பேட்டி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு: விரைவில் அமைகிறது விசாரணை குழு;கிலியில் அதிமுகவினர் -அமைச்சர் நேரு பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், நீர்வழித்தடங்களில் ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் தமிழ்நாடு ஆளில்லா வான்வெளி வாகன கழகத்தோடு இணைந்து 15 நாட்கள் நடத்தப்படும் இந்த பணியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, கொசுக்கள் இல்லா சென்னையாக உருவாக்க சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விவரித்தார்.

மேலும் சென்னையின் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் நடத்தப்பட உள்ளதாக கூறிய அவர், சென்னையில் ஏற்பட்ட பெருமழைக்கு பிறகு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள் புதிதாக போடப்பட்டு உள்ளதாகவும், தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலை போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் சென்னை மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளுக்கும் சென்னையின் மைய பகுதியில் இருப்பது போன்ற குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுற்று புதிய உறுப்பினர்கள் தேர்வாகியுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் தேவையான பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றார்.

அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சியில் நிதிச்சுமை காரணமாக நிரப்பப்படாமல் உள்ள காலி பணியிடங்கள், முதலமைச்சரின் அனுமதிபெற்று நிரப்பப்படும் என்றார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். விரைவில் வெளியாக உள்ள இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாநகராட்சி, நகராட்சி அருகில் உள்ள புறநகர் பகுதியில் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய திட்டங்கள் கொண்டு வரப்படவும் உள்ளது என்றும் கூறினார்.

banner

Related Stories

Related Stories