நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றியுள்ளது.
மேலும், பேரூராட்சிகளிலும் ஒருசில இடங்களைத் தவிர அனைத்தையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க பல இடங்களில் ஒற்றை இலக்கங்களிலும், ஒருசில இடங்களில் ஒரு வாக்கு கூட பெறாமலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் பலரும் பா.ஜ.கவை கிண்டல் செய்தனர்.
இந்நிலையில், தி.மு.க குறித்து பா.ஜ.கவினர் பொய்யான பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். இரணியல் பேரூராட்சியில் தி.மு.க வேட்பாளர் ஒரு வாக்கு மட்டுமே பெற்றதாக பொய்யைப் பரப்பி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இரணியல் பேரூராட்சியின் 4வது வார்டில் தி.மு.க போட்டியிடாத நிலையில், தி.மு.க ஒரு வாக்கு மட்டுமே பெற்றதாக பா.ஜ.கவினர் பரப்பி வருகின்றனர்.
அங்கு தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ரெத்தின பாய் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சுயேட்சையாகப் போட்டியிட்ட வேட்பாளரை தி.மு.க வேட்பாளர் என பா.ஜ.கவினர் குறிப்பிட்டு பொய்யான செய்தியைப் பரப்பி வருவது அம்பலமாகியுள்ளது.