தமிழ்நாடு

மனைவி இறப்பில் மர்மம்.. கைதாகி சிறையில் இருந்த கணவன் ‘திடீர்’ மரணம் - நடந்தது என்ன?

மனைவி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கணவன், மூச்சுத்திணறலால் சிறையிலேயே உயிரிழந்துள்ளார்.

மனைவி இறப்பில் மர்மம்.. கைதாகி சிறையில் இருந்த கணவன் ‘திடீர்’ மரணம் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருப்பத்தூரில் மனைவி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கணவன், மூச்சுத்திணறலால் சிறையிலேயே உயிரிழந்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த நந்தினி (26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நந்தினி வீட்டிலுள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நந்தினியின் தலையின் பின்புறம் பலத்த காயங்கள் இருப்பதை அறிந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் நந்தினி அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து போலிஸார் விசாரணை நடத்தியதில் ராஜாமணிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி நந்தினி தகராறு செய்ததும், அதன் காரணமாக ஏற்பட்ட சண்டையின்போது காயமடைந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜாமணி மீது வழக்குப்பதிவு செய்து நேற்றிரவு ராஜாமணியை கைது செய்து வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ராஜாமணியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து ராஜாமணி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை வேலூர் மத்திய சிறையில் இருந்த ராஜாமணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவரின் முதலுதவிக்குப் பின் ராஜாமணியை அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜாமணி உயிரிழந்துள்ளார்.

ராஜாமணிக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்னை இருந்து வந்ததால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிறையில் இருந்தபோது அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories