தமிழ்நாடு

பொங்கல் கொண்டாட ஊருக்குச் சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் பரிதாப பலி!

பொங்கல் கொண்டாட ஊருக்குச் சென்ற சகோதரர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் கொண்டாட ஊருக்குச் சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் பரிதாப பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்டம், குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குமார் மற்றும் வெங்கடவரதன். சகோதரரான இவர்கள் சென்னை குரோம்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காகச் சகோதரர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வாடகை கார் எடுத்துக் கொண்டு சொந்தஊர் சென்றனர்.

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி ஒன்று திடீரென கார் மீது வேகமாக மோதியது. இதில் கார் தீப்பற்றி எரிந்தது. இதனால் யாரும் காரை விட்டு வெளியே வர முடியாமல் தீயில் மாட்டிக் கொண்டனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலிஸாரும் தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் காரில் கருகிய நிலையில் சடலமாக கிடந்த சகோதரர்கள் குமார் மற்றும் வெங்கடவரன் ஆகிய இருவரது உடலையும் போலிஸார் மீட்டனர்.

அதேபோல், காரில் வந்த தன்யாஸ்ரீ என்ற சிறுமியும், ஓட்டுநர் விஸ்வநாதன் ஆகியோர் அதிக தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சாலை விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொங்கல் கொண்டாடுவதற்காகச் சொந்த ஊர் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories