தமிழ்நாடு

கடலில் மிதந்த பார்சல்.. 21 கோடி ஹெராயினை விற்க முயன்ற மீனவர்கள்.. அதிரடியாக பறிமுதல் செய்த போலிஸார்!

தூத்துக்குடியில் ஹெராயின் விற்க முயற்சித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடலில் மிதந்த பார்சல்.. 21 கோடி ஹெராயினை விற்க முயன்ற மீனவர்கள்.. அதிரடியாக பறிமுதல் செய்த போலிஸார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தூத்துக்குடியில் ஓராண்டாக இலவுகாத்த கிளியாய் ஹெராயினை பாதுகாத்த மீனவர், அதை விற்க முயற்சித்த விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி நகரத்தில் டூவிபுரம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த மூவரை பிடித்து போலிஸார் விசாரித்தனர்.

இந்த விசாரணையில் அவர்கள் மாரிமுத்து (26), அன்சார் அலி(26), இம்ரான் கான் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் புழக்கத்திற்காக வைத்திருந்த 162 கிராம் ஹெராயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர்கள் 3 பேரிடமும் தூத்துக்குடி மத்திய பாகம் போலிஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அந்தோணி முத்து (42), பிரேம் சிங் (38), கஸாலி (27) ஆகிய மூன்று பேரை போலிஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 21 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மீனவர் அந்தோணி முத்து தனது சகாக்களான பிரேம் சிங், கசாலி ஆகியோருடன் தங்கு கடல் மீன்பிடிப்புக்காக அரபிக்கடலின் மினிகாய் தீவு பகுதியில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் மிதந்து வந்த மர்ம பார்சலை மீட்டெடுத்து தருவைகுளத்தில் அந்தோணிமுத்து வீட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்.

பார்சலில் இருந்த பவுடர் போன்று இருந்த ஹெராயினை என்னவென்றே தெரியாமல் அதை வீட்டிலேயே பாதுகாத்து வந்துள்ளார். பிறகு அதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் தனக்கு நம்பிக்கையானவர்களிடம் சிறு, சிறு பாக்கெட்டுகளில் அடைத்து புழக்கத்திற்காக கொடுத்துள்ளார். இவ்வாறாக 30 பாக்கெட்டுகள் போடப்பட்டதில் 3 பாக்கெட்டுகளை பரிசோதனை முறையில் பல்வேறு நபர்களுக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு அவர் கடலில் இருந்து மீட்டெடுத்து வந்தது ஹெராயின் போதைப் பொருள் என்பது தெரியவந்துள்ளது.

அதன் சர்வதேச மதிப்பை தெரிந்துகொண்ட அவர், ஹெராயினை சட்டவிரோதமாக விற்று பணம் சம்பாதிக்கும் நோக்கில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் விற்க முடிவு செய்துள்ளார். இதற்காக தான் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த பாக்கெட்டுகளிலிருந்து 6 பாக்கெட்டுகளை தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஏஜெண்டு முருகன் என்பவர் மூலமாக தலா 1 பாக்கெட் 1 முதல் 1.5 லட்சம் வரை விற்பனை செய்துள்ளார்.

இந்தநிலையில் தான் டூவிபுரம் பகுதியில் இம்ரான் கான், அன்சார் அலி, மாரிமுத்து ஆகிய மூவரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 162 கிராம் ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் முருகன் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலிஸார் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்த அன்சார் அலி, மாரிமுத்து, இம்ரான்கான், அந்தோணி முத்து, கசாலி, பிரேம் என்ற பிரேம் சிங் ஆகிய 6 பேரையும் கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.21 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல், விற்பனை வழக்கில் ஈடுபட்ட 22 பேர் உள்பட இதுவரை 195 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மேலும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories