தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து : நீதிபதியின் சர்ச்சை தீர்ப்புக்கு சட்டத்தின் வழியே தீர்வுகண்ட முதல்வர்!

எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை எனக் கூறிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து : நீதிபதியின் சர்ச்சை தீர்ப்புக்கு சட்டத்தின் வழியே தீர்வுகண்ட முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில், அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதால், மக்கள் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை என்ற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது.

மேலும், எந்தவித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும் எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாகவும் தமிழ் ஆர்வலர்கள் வேதனையடைந்ததாக தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக, பொது நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததாக கூறப்பட்டது.

சங்கராச்சாரியார் விஜயேந்திரரின் இத்தகைய நடவடிக்கையை தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டித்த நிலையில், ராமேஸ்வரம் காஞ்சி மடத்துக்குள் நுழைந்த தமிழ் ஆர்வலர்கள் சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்குச் சென்றது.

தமிழ்த்தாய் வாழ்த்து : நீதிபதியின் சர்ச்சை தீர்ப்புக்கு சட்டத்தின் வழியே தீர்வுகண்ட முதல்வர்!

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை. மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்க பாடல். தேசிய கீதம் அல்ல. இவ்வாறு எழுந்து நின்றுதான் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

பல்வேறு கலாச்சாரங்களை மதிக்கிற, கொண்டாடுகிற நாம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இப்படித்தான் மரியாதை செலுத்த வேண்டும் என்பது சரியல்ல. ஆன்மிகவாதிகள் பிராத்தனையின்போது தியான நிலையில் இருப்பார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து இறைவணக்கப் பாடல் என்பதால், அந்தப்பாடல் இசைக்கப்படும்போது ஆன்மிகவாதிகள் தியான நிலையில் இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தியான நிலையில் கண்களை மூடிய நிலையில் இருந்துள்ளார். தாய் மொழி தமிழுக்கு அவர் அவரது வழியில் உரிய மரியாதை செலுத்தியுள்ளார்.” எனக் கூறினார்.

நீதிபதியின் இத்தகைய தீர்ப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு கட்டாயம் அனைவரும் எழுந்து நின்று, கட்டாயம் பாடவேண்டும் என சட்டத்தின் வழி நின்றே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை என்ற நிலையை மாற்றும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த அரசாணையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும்.

அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இத்தகைய நடவடிக்கை பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories