தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழையாலும், தக்காளியின் வரத்துக் குறைவு காரணமாக தக்காளி விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் நேற்று தக்காளி கிலோ 140 ரூபாய் வரை விற்கப்பட்டது.
தொடர் தக்காளி விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை எடுத்தது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளிலும், நியாயவிலைக்கடைகளிலும் குறைந்த விலையில் தக்காளி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
இதனிடையே, வட மாநிலங்களில் மழை குறைந்ததால், தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்றை விட கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை ரூ.50 குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படுகின்றது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "தொடர் மழையின் காரணமாக, தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது. தற்போது தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் விலை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும்” என தெரிவித்துள்ளனர்.