தமிழ்நாடு

”ஏசி ரூமில் இருந்து ஆர்டர் போடும் அமைச்சர்களாக நாங்கள் இருக்கவில்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தமிழகத்தில் புதிதாக சித்தமருத்துவ பல்கலைக்கழகம் டிசம்பர் இறுதிக்குள் சென்னையில் முதல்வர் துவக்கி வைப்பார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் மழைக்கால சிறப்பு ஆயுர்வேத மருத்துவ முகாமிற்கான வாகனங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார் .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,

"1560 இந்திய மருத்துவ சிகிச்சை மையம் மூலம் டெங்கு , வெள்ளம் பாதித்த பகுதியில் கபசுரம் , நில வேம்பு , மருந்து மாத்திரைகள் அளிக்கப்படுகிறது. சென்னையில் 50 நடமாடும் வாகனம் , ஒரு வாகனத்தில் 3 மருத்துவர்கள் மூலம் 150 மருத்துவர்களை பயன்படுத்தி மருந்துகள் விநியோகம். ஒரு வாகனத்தில் தலா 30 லிட்டர் கபசுரம் , நிலவேம்பு குடிநீருடன் தாளிசாதி , ஆடாதொடை உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே முதல்வர் அறிவுறுத்தல்படி இந்திய மருத்துவம் , ஹோமியோபதி துறை சார்பில் மே 7 முதல் கொரோனா சிகிச்சை மையம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரை 35,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இதன் மூலம் குணமடைந்தனர்.

மருத்துவர்களுக்கு தற்போதைய நிலை கடினமான இலக்குதான் , என்றாலும் வேலை செய்வதில் சிரமம் இருந்தாலும் , திருப்தியாக , மகிழ்ச்சியாக இருக்கின்றனர். எப்போதுமே வேலையே செய்யாமல் இருக்கும் 4, 5 மருத்துவர்கள்தான் சமூக வலைதளங்களில் கூடுதல் பணிச்சுமை தரப்படுவதாகவும் , டார்கெட் வைத்து வேலை வாங்குவதாகவும் விமர்சிக்கின்றனர்.

விசாரித்ததில் அவர்கள் வேலையே செய்யாதவர்கள்தான் என தெரிய வந்துள்ளது. இன்னும் ஒரு மாதம் மட்டும் ஆத்மார்த்தமாக வேலை செய்யுமாறு மருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதுவரை சக மருத்துவர்கள் செய்யும் வேலையை கெடுக்க முனைய வேண்டாம்.

முறையாக வேலை செய்யாத மருத்துவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் . சமூக வலைதளங்களில் பதிவிட்டாலும் அவர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கை இருக்காது. ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு , ஆர்டர் போடும் அமைச்சர்களாக நாங்கள் இல்லை. கொரோனாவின்போது பல முறை ஐசியூக்களுக்கே சென்றோம். மலை கிராமங்களுக்கு கூட மருத்துவர் , செவிலியருடன் சென்றோம்.

15 சதவீத அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான பணிகள் முடிந்த பிறகே மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த முடியும். 2 நாட்களாக ஒன்றிய அரசுடன் மருத்துவ கலந்தாய்வுக்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான பணிகள் முடித்த அடுத்த நொடியே மருத்துவ கலந்தாய்வை தொடங்கி விடுவோம். 10.5 சதவீத ஒதுக்கீட்டு வழக்கால் எந்த தாமதமும் இல்லை. மருத்துவ காலி பணியிடம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து இடங்களும் நிரப்பப்படும்.

இந்திய மருத்துவ சிகிச்சை மையம் மூலம் 10 நாட்கள் இந்த மருந்து வழங்கும் பணி நடைபெறும். தமிழகத்தில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைகழகம் சென்னையில் டிசம்பர் இறுதிக்குள் முதல்வர் துவக்கி வைப்பார். நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் இருக்கிறது, ஆளுநருடன் உயர் அலுவலர்கள் குழு மூலம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம் " என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories