தமிழ்நாடு

"மழையை காரணம் காட்டி கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் கடும் நடவடிக்கை" : அமைச்சர் நாசர் எச்சரிக்கை!

ஆவின் பால் பொது மக்களுக்கு தடையின்றி கிடைக்க, வாட்ஸ் அப் குழு உருவாக்கி தகவல்களை பகிர பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உத்தரவிட்டுள்ளார்.

"மழையை காரணம் காட்டி கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் கடும் நடவடிக்கை" : அமைச்சர் நாசர் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பால் கொள்முதல் மற்றும் பால் விநியோகம் குறித்து மாவட்ட ஒன்றியத்தின் பொது மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார்.

போர்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றி ஆவின் பால் பொது மக்களுக்கு தடையின்றி கிடைக்க, வாட்ஸ் அப் குழு உருவாக்கி தகவல்களை பகிர உத்தரவிட்டுள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் எந்தவித சுணக்கமும் இன்றி பால் கொள்முதல் மற்றும் விநியோகம் நடைபெற வேண்டும். 2015 ஆம் ஆண்டு அரசின் கவனக்குறைவினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மிகவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தென் சென்னை பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. சமார் 18 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். ஒரு பால் பாக்கெட் 1/2 லிட்டர் ரூ.180 முதல் ரூ.200 வரை விற்கப்பட்டது. ஆடு, மாடுகள் நிறைய இறந்தன. எனவே இந்த நிலை வராமல் இருக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் முன்கூட்டியே சிந்தித்து கூடி வாழ்தால் கோடி நன்மை என்பதற்கு ஏற்ப எல்லோரையும் ஒருங்கிணைத்து வெள்ளம் பணிகளை கண்காணித்து வருகின்றார்.

மாவட்ட ஒன்றியத்தில் உள்ள பொது மேலாளர்கள் அனைவரும் தீபாவளி சிறப்பு இனிப்பு வகையில் விற்பனையில் கவனம் செலுத்தி அதிக இலாபத்தை ஆவினுக்கு பெற்று தந்தீர்கள். சென்ற ஆட்சியில் ஆவின் தீபாவளி இனிப்புகள் 40 நாட்களுக்கு ரூ.55 கோடி விற்பனை செய்தார்கள். ஆனால், இம்முறை நாம் 18 நாட்களில் ரூ.83 கோடி விற்பனை செய்து சாதனை படைந்துள்ளோம். இது, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

தீபாவளி விற்பனையில் திருச்சி மாவட்ட ஒன்றியம் சென்ற ஆண்டை விட கூடுதலாக ரூபாய் 2 கோடி 16 இலட்சம் விற்று முதலிடமும் இரண்டாவதாக மதுரை மாவட்ட ஒன்றியமும் மற்றும் மூன்றாவதாக சேலம் மாவட்ட ஒன்றியம் பெற்றுள்ளது. தொடர்ந்து தற்போது இயற்கை பேரிடர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகின்ற காரணத்தால் இன்னும் சிறப்புடன் ஆவின் நிர்வாகம் செயல்படுகின்றது என்பதை நாம் நிரூபித்து காட்ட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

எனவே, கீழ்கண்ட அறிவுறைகளை உங்களிடம் தெரிவிப்பது எனது முக்கிய நோக்கமாகும்.

  • மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து பெறப்படும் பாலினை தங்குதடையின்றி இணையத்தின் பால் பண்ணைகளில் பெற்று பால் பதப்படுத்துதல் மற்றும் பால் சிப்பம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இயந்திரங்கள் இயங்கங்களும் சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும்.

  • துணை பதிவாளர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் மழையின் காரணமாக பால் கொள்முதல் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  • பால் கொள்முதல் வழித்தட வாகனங்கள் சங்கங்களில் பாலை எவ்வித தடையுமின்றி சேகரம் செய்வதையும் முறையாக இயங்குவதையும் கண்காணிக்க வேண்டும். மேலும், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சங்கங்களுக்கு நேரடியாக சென்று பால் கொள்முதல் பணிகள் பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்நடை தீவனங்கள் மற்றும் இடு பொருட்களை சேமிப்பதற்கு ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான அரசு சேமிப்பு கிடங்குகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பெற்றிட வேண்டும்.

  • ஒன்றியத்தின் கால்நடை மருத்துவர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று கறவை மாடுகளை கண்காணிக்கவும், மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

  • வெள்ளத்தின் காரணமாக பசும் புல் கிடைக்காத நிலையில் தேவையான உலர் தீவனங்கள் வைக்கோல் மற்றும் சோளத்தட்டை ஆகியவற்றை பெற்று வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

  • அனைத்து சங்கத்திலும் துணை பதிவாளர்கள், பொது மேலாளர்கள், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் முதுநிலை ஆய்வளார்களின் தொலைபேசி எண்கள் சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும்.

  • மாவட்டங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று பால் விநியோகம் செய்ய குழு அமைக்கப்பட வேண்டும்.

  • மாவட்டங்களில் உள்ள பாலகங்கள் மற்றும் பால் விநியோக பகுதிகளில் தேவையான பாலை இருப்பில் வைத்து விநியோகம் செய்யப்பட வேண்டும்.

  • மாவட்ட ஒன்றியங்களில் 24 மணிநேரமும் இயங்கும் குறைதீர்ப்பு மையம் அமைக்கப்பட்டு அதன் எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

  • அப்லோடாக்சின் பூஞ்சை போன்றவை உருவாகாத வண்ணம் தீவனங்கள் உலர்வாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட வேண்டும்.

  • துணைப் பதிவாளர்கள், பொது மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட தலைமை இடத்திலேயே எந்நேரமும் இருக்க வேண்டும். மின்தடை காலங்களில், தேவையான ஜெனரேட்டர் மற்றும் டீசல் வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் துணைப் பதிவாளர்கள் மற்றும் பொது மேலாளர்கள் அடங்கிய ஒரு வாட்ஸ் ஆப் எண்ணினை பகிரப்பட வேண்டும்.

  • பால் இருப்பில் வைக்கப்பட்டுள்ள இடத்தின் விவரங்கள், பாலகங்களின் விவரங்கள் மற்றும் பாலானது நேரடியாக விநியோகம் செய்யப்படின் அதன் விவரங்கள் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

  • அரசு தொலைக்காட்சி செய்தித்தாள் ஆகியவைகளில் பால் விநியோகப் பணிகளை தங்குதடையின்றி மேற்கொள்ளப்பட அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தொலைபேசி எண்கள் மற்றும் பிற விவரங்கள் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

  • மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்கையோடு பின்னி பிணைந்த ஒன்றாக ஆவின் பால் உள்ளது. ஏன் என்றால் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் முழுக்க முழுக்க கொரோனா தொற்று காலங்களிலும் சரி, வெள்ளம் பாதிக்கப்பட்ட காலங்களிலும் சரி நேரடியாக அவரே களத்தில் இரங்குகிறார். எனவே இந்த பேரிடர் காலத்திலும் மிகவும் சிறப்புடன் செயல்பட்டது என்ற பெயரினை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் எடுத்து செல்வது நம்முடைய கடைமையாகும். எனவே, நானும் மேலாண்மை இயக்குநர் அவர்களும் திடீர் என ஆய்வுக்கு வருவோம்.

இக்காணொளி காட்சி ஆய்வில், ஆவின் மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி, இ.ஆ.ப. மற்றும் தலைமையிடத்து ஆவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories