தமிழ்நாடு

வெள்ளிக்கிழமை வரை மழை கொட்டும்... ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைவதால் வானிலை மையம் எச்சரிக்கை!

குமரிக்கடல் கடற் பகுதியை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை வரை மழை கொட்டும்... ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைவதால் வானிலை மையம் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குமரிக்கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

குமரிக்கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.

இதன் காரணமாக, 01.11.2021: (ஆரஞ்சு எச்சரிக்கை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

02.11.2021: டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

03.11.2021: மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

04.11.2021: வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

05.11.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கொத்தவாச்சேரி (கடலூர்) 15, சேத்தியாத்தோப்பு (கடலூர்), பாண்டவையார் (திருவாரூர்) தலா 9, திருவாரூர் (திருவாரூர்) 8, திருத்துறைப்பூண்டி (திருவாரூர் ), குறிஞ்சிப்பாடி (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 7, புவனகிரி (கடலூர்), சோழவரம் (திருவள்ளூர்), சிதம்பரம் (கடலூர்), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), இரணியல் (கன்னியாகுமரி) தலா 6, மன்னார்குடி (திருவாரூர்), ராதாபுரம் (திருநெல்வேலி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), கொடவாசல் (திருவள்ளூர்), புழல் (திருவள்ளூர்), நெய்வேலி (கடலூர்), வலங்கைமான் (திருவாரூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), ராசிபுரம் (நாமக்கல்), நீடாமங்கலம் (திருவாரூர்), கிராண்ட் அணை (தஞ்சாவூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கடலூர் தலா 5.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

01.11.2021, 02.11.2021: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

01.11.2021 முதல் 03.11.2021 வரை: கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

04.11.2021, 05.11.2021: கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

banner

Related Stories

Related Stories