கரூர் நகரில் நள்ளிரவு 12.30 மணியளவில் இந்து முன்னணி சார்பில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் மற்றும் வ.உ.சி தெரு உள்ளிட்ட இரண்டு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிலைகள் வைக்க எடுத்துச் சென்றனர்.
கொரனோ பரவல் காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட ஒன்றிய அரசே தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறி நான்கரை அடி உயர விநாயகர் சிலையை வைக்க முற்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு வைக்கப்பட்டிருந்த சிலையை போலிஸார் அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து வ.உ.சி தெரு பகுதியில் சிலையை வைக்க வாகனத்தில் எடுத்துச் சென்றனர்.
அங்கேயும் சிலைகளை வைக்க அனுமதிக்காத போலிஸார் இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி சிலைகளை பறிமுதல் செய்ய முற்பட்டனர்.
அப்போது போலிஸாரிடம், இந்து முன்னணியினர் தகராறு செய்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளும் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து சிலைகளை போலிஸார் பறிமுதல் செய்து கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைத்தனர்.