தமிழ்நாடு

மனைவி மீது சந்தேகம்; கூலிப்படையை ஏவி வாலிபர் கடத்தல் : சென்னை → திருச்சி → கேரளா நடந்த பகீர் சம்பவம்!

கோயம்பேட்டில் போலீஸ் எனக்கூறி பட்டதாரி வாலிபர் காரில் கடத்தல். போலீசார் தீவிர விசாரணை.

மனைவி மீது சந்தேகம்; கூலிப்படையை ஏவி வாலிபர் கடத்தல் : சென்னை → திருச்சி → கேரளா நடந்த பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை செக்காடு காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுதாகர்(29). பட்டதாரியான இவர் பட்டாபிராமில் சொந்தமாக சிவில் கன்ஸ்ட்ரக்‌ஷன் தொழில் செய்து வருகிறார். சுதாகர் இதற்கு முன்பு கே.கே நகரில் உள்ள தமிழ்நாடு ஹவுசிங் போர்டில் உதவி பொறியாளர் தனலட்சுமியிடம் தற்காலிகமாக பணி செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி சுதாகரை தொடர்பு கொண்ட சிலர், வீடு கட்ட வேண்டும் அது குறித்து பேசுவதற்காக கோயம்பேடு அருகே உள்ள தனியார் ஹோட்டலுக்கு வருமாறு கூறியுள்ளனர். இதனை நம்பி வந்த சுதாகரை, சுமார் 3 நபர்கள் தாங்களை மதுரை போலீஸ் எனக்கூறி உன் மீதுள்ள வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென காரில் அழைத்து சென்று அன்னை இல்லம் அருகே வைத்து செல்போன் மற்றும் ஏடி.எம் கார்டை பறித்துள்ளனர்.

பின்னர் மதுரை டி.எஸ்.பியிடம் ஆஜர்படுத்த வேண்டும் எனக்கூறி காரில் திருச்சி நெடுஞ்சாலை வழியாக அழைத்து வரும்போது சுமார் ஆறு நபர்கள் டி.எஸ்.பி என தெரிவித்து உதவி பொறியாளர் தனலட்சுமி குறித்து விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து கேரளாவிற்கு காரில் அழைத்து சென்று விடுதியில் அடைத்து வைத்து தனலட்சுமிக்கு எதிராக ஆவணங்களை சேகரித்து கொடுக்கும் படியும், இல்லையென்றால் சுதாகரையும் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சங்கரன் கோவில் அழைத்து சென்று சுதாகரை நிர்வாணமாக வீடியோ எடுத்து, தனலட்சுமி குறித்தான ஆவணங்களை தரவில்லையென்றால் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணிடம் இந்த வீடியோவை அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் தனலட்சுமிக்கு சுதாகர் போன் செய்த போது உனது குடும்பத்தினர் காணவில்லை என்று தேடி கொண்டிருப்பதாகவும், அண்ணா நகர் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

இதனால் பயந்து போன அந்த கும்பல் 16 ஆம் தேதி திருச்சி பைபாஸ் சாலையில் சுதாகரை இறக்கிவிட்டு சென்றனர். இதனையடுத்து சுதாகர் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு வந்த போது சம்பவம் நடந்த இடம் சி.எம்.பி.டி காவல் நிலைய எல்லை என்பதால் போலீசார் அங்கு சென்று புகார் அளிக்கும் படி தெரிவித்தனர்.

ஆனால் சுதாகர் உடல்நிலை சரியில்லாமல் போனதால் கடந்த 24 ஆம் தேதி இது குறித்து சி.எம்.பி.டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உதவி பொறியாளர் தனலட்சுமி முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இரண்டாவது கணவரை பிரிந்து சுதாகருடன் உறவில் இருந்து வருவது தெரியவந்தது. இதனால் இரண்டாவது கணவர் கோபமடைந்து சுதாகரை கடத்தி உள்ளனரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories