தமிழ்நாடு

"ஆதிதிராவிட, பழங்குடியினரின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு திமுக அரசு துணையாக இருக்கும்" - முதல்வர் உறுதி!

தீண்டாமை பாகுபாட்டைக் காட்டுவது சட்டப்படி தவறானது என்ற எண்ணம் சிலருக்கு இல்லை. அதை தைரியமாகவே செய்கிறார்கள். இத்தகைய சட்டமீறல்கள் தடுக்கப்பட்டாக வேண்டும்; தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

"ஆதிதிராவிட, பழங்குடியினரின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு திமுக அரசு துணையாக இருக்கும்" - முதல்வர் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையால் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-

”திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றாலே அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை - எளிய மக்களுக்கான அரசுதான் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். நீங்களும் அறிவீர்கள். கழகம் எப்போதெல்லாம் ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேன்மைக்கான நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஆறாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள கழக அரசு, ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறது என்பதை முதலில் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 கல்வி, வேலைவாய்ப்பில் அம்மக்கள் உரிய இடங்களைப் பெற வேண்டும் என்பது முதலாவது.

 சமூக அமைப்பில் அவர்கள் எந்தச் சூழலிலும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பது இரண்டாவது.

 சாதியைக் காரணம் காட்டி அவர்களது வளர்ச்சி தடுக்கப்படக் கூடாது என்பது மூன்றாவது.

 அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகிய அனைத்து மட்டங்களிலும் அவர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பது நான்காவது.

 அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது ஐந்தாவது.

- இத்தகைய சிந்தனை கொண்ட அரசுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு – அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிருக்கிறது.

‘சூ… மந்திரகாளி!’ என்பதைப் போல நாளையே இவை எல்லாம் நடந்துவிடும் என்று நானும் நினைக்கவில்லை; நீங்களும் நினைக்கமாட்டீர்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த இலக்கை அடைவதற்கான நமது தூரம் குறைக்கப்பட வேண்டும். அதற்கு அரசும், உங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும், சமுதாய அமைப்புகளைச் சார்ந்தவர்களும், அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் உழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இத்தகைய சூழலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கக்கூடிய தீண்டாமைச் சம்பவங்களைக் கேள்விப்படும்போது வருத்தம் ஒருபுறம் இருக்கிறது – ஆத்திரம் வருகிறது - கோபம் வருகிறது. அதை யாரும் மறுக்க முடியாது. கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பது அப்படியேதான் இருக்கின்றன. அதில் மாற்றம் செய்ய இன்னும் பல ஆண்டுகாலம் கடக்க வேண்டும் என்றே தெரிகிறது. இதனைச் சட்டத்தின் மூலமாக ஓரளவு சரிசெய்ய முடியும். அத்தகைய சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1955, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 ஆகிய இரு சட்டங்களும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் தீண்டாமை வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 17-ன்படி, தீண்டாமை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தீண்டாமை பாகுபாட்டைக் காட்டுவது சட்டப்படி தவறானது என்ற எண்ணம் சிலருக்கு இல்லை. அதை தைரியமாகவே செய்கிறார்கள். இத்தகைய சட்டமீறல்கள் தடுக்கப்பட்டாக வேண்டும்; தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

தீண்டாமை குற்றம் இழைத்தவர் தப்பிவிடக் கூடாது. அதே நேரத்தில், அந்தச் சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்திவிடவும் கூடாது. இந்த அரசு பொறுப்பேற்றதும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்ட விதியின்படி, மாநில அளவில் இருக்கக்கூடிய உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவைத் திருத்தி அமைத்திருக்கிறோம். அரசும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணையும் குழுவாக இது அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையிலே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிநிதிகளும், சட்டம் உருவாக்குபவர்களும் இணைந்து இதிலே பங்கெடுத்திருக்கிறார்கள்.

"ஆதிதிராவிட, பழங்குடியினரின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு திமுக அரசு துணையாக இருக்கும்" - முதல்வர் உறுதி!

மக்கள் மேம்பாட்டைப் பொறுத்தவரையில், 2021-2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த நிதி ஒதுக்கீட்டில், ஆதிதிராவிடர் நலத் திட்டங்களுக்காக ரூ.3,588.87 கோடியும், பழங்குடியினர் நலத் திட்டங்களுக்காக ரூ.543.42 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த, ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின்கீழ் ரூ.14,696.60 கோடியும், பழங்குடியினர் துணைத் திட்டத்தின்கீழ் ரூ.1306 கோடியும் ஒதுக்கப்பட்டு, பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளை மேம்படுத்த சிறப்பு மூலதன ஒதுக்கீடாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நபார்டு வங்கியின் ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின்கீழ் ரூ.123 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நிரப்பப்படும். தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலக் குழு ஆகியவற்றை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்த அரசு எப்போதும் துணையாக இருக்கும் என்பதை இந்நேரத்தில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு முதலமைச்சர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories