தமிழ்நாடு

"பா.ஜ.கவுக்கு தாவினாலும் தப்ப முடியாது; ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை உறுதி" : அமைச்சர் நாசர்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பா.ஜ.கவுக்கு சென்றாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

"பா.ஜ.கவுக்கு தாவினாலும் தப்ப முடியாது; ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை உறுதி" : அமைச்சர் நாசர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ஆளுநரிடமும் தி.மு.க அரசு புகார் கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணைக்குப் பயந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பா.ஜ.கவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், "அ.தி.மு.க ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்த அனைவரின் மீதும் ஆளுநரிடம் ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை தொடரும். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பா.ஜ.கவுக்கு தாவினாலும், சட்டத்திலிருந்து தப்ப முடியாது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி" எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க அரசு பின்வாங்குவதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, கண்ணிருந்தும் குருடனாகவும், காதிருந்தும் செவிடனாகவும் இருக்கிறார் எல்.முருகன் எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories