தமிழ்நாடு

இளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்!

புதுச்சேரியில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த பா.ஜ.க நிர்வாகி மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுச்சேரியில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க பிரமுகர் உள்ளிட்ட 4 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

திருச்சி பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (31). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வேலை தேடிச் சென்றுள்ளார். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால் தங்க இடமின்றி மேட்டுப்பாளையம் பெட்ரோல் பங்க் ஓரமாக தூங்கச் சென்றுள்ளார்.

அப்போது, சதீஷ்குமாரை பார்த்த பெட்ரோல் பங்க் உரிமையாளரும், பா.ஜ.க வணிகப் பிரிவு மாநில அமைப்பாளருமான ராஜ மவுரியா உள்ளிட்ட 7 பேர் சதீஷ்குமாரிடம் யார், எந்த ஊர் என்று விசாரித்துள்ளனர்.

சதீஷ்குமாரின் தோற்றத்தைக் கண்டு கொள்ளையடிக்க அல்லது பில்லி சூனியம் வைக்க வந்திருப்பாரோ என்று சந்தேகமடைந்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து, பெட்ரோல் பங்க்கில் இருந்து பெட்ரோல் பிடித்துவந்து சதீஷ்குமார் மீது ஊற்றித் தீ வைத்து எரித்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த சதீஷ்குமாரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சதீஷ்குமார் 60% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ராஜ மவுரியா, அவரது தம்பி ராஜவரதன், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சிவசங்கர், குமார் ஆகிய 4 பேரையும் நேற்று இரவு கைது செய்தனர்.

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான வெற்றி நாராயணன், சிவா, பிரசாந்த் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

இளைஞரை பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட கும்பல் உயிரோடு எரித்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories