நிர்ணயிக்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித் துறையில் இருக்கும் பிஎட் ஆசிரியர் படிப்புக்கு ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் தனியார் கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலித்தால் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் இந்தாண்டு கல்வி கட்டணம் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழகம் மாணவர் நலன் கருதி அல்ல கடந்த ஆட்சியில் பெயர் வைக்க வேண்டும் என்ற அளவுக்கு துவங்கப்பட்டது. இதுவரை அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட 4 பேர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என சாடியுள்ளார்.
கடந்த ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறையில் பல்வேறு பணி நியமன முறைகேடுகள் நடைபெற்றது. அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் தங்கை திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை அந்தந்த கல்லூரி உதவி மையங்கள் மூலம் நேரடியாக கொடுக்கலாம். பள்ளிக்கல்வித்துறை போல் உயர் கல்வி பாடப் புத்தகத்திலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று பாடப் புத்தகத்தில் இருக்கும் என தெரிவித்தார்.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருந்த பாடப்புத்தகங்களில் பல்வேறு தவறுகள் நடைபெற்றது . அதனை சரிசெய்து புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளது. கல்லூரிகள் திறப்பது குறித்து கொரோனா பரவல் குறைந்த பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.