தமிழ்நாடு

இன்று டெல்லி பயணம்.. நாளை குடியரசுத் தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரைச் சந்திக்க இன்று டெல்லி செல்கிறார்.

இன்று டெல்லி பயணம்.. நாளை குடியரசுத் தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரைச் சந்திக்க இன்று டெல்லி செல்கிறார். நாளை குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசுகையில் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து வலியுறுத்துகிறார்.

பிரதமர் மோடி, கொரோனா 3வது அலை தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே, பிரதமர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.

மேலும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் அவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அதன்படி, இன்று (18ம் தேதி) பிற்பகல் சென்னையில் இருந்து முதல்வர் விமானம் மூலம் டெல்லி செல்கிறார். நாளை இரவு டெல்லியிலேயே தங்குகிறார்.

இன்று டெல்லி பயணம்.. நாளை குடியரசுத் தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

இதையடுத்து 19ம் தேதி திங்கட்கிழமை டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்திக்கும்போது, ‘‘தமிழ்நாட்டில், நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள கடந்த 3 ஆண்டுகளாக பாதித்து வருகிறார்கள். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த ஒரு ஆண்டாக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் செயல்படவில்லை. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் நீட் தேர்வு எழுதினாலும் அவர்களால் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ படிப்பில் சேர முடியாது. அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

நாளை 19ம் தேதி நாடாளுமன்ற கூட்டம் தொடங்க உள்ளதால், தமிழ்நாடு எம்.பி.க்கள் அனைவரும் அன்றைய தினம் டெல்லியில்தான் இருப்பார்கள். முக்கியமாக இந்த சந்திப்பின்போது, மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது எனவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நேரில் வலியுறுத்துவார். மேலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும், தமிழ்நாடு மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கடந்த மாதம் 17ம் தேதி டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் பல முக்கிய கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தார். அப்போதும் மேகதாது அணை குறித்து விளக்கி, கர்நாடக அரசு மேகதாது திட்டத்தை கைவிட அறிவுறுத்தும்படி பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டெல்லி சென்று, 19ம் தேதி குடியரசுத் தலைவரை சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கழக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், “குடியரசுத் தலைவரைச் சந்திக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கொரோனா காரணமாக தள்ளிப் போடப்பட்டிருந்தது. வரும் திங்கட்கிழமை குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதல்வருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதன்படி இன்று முதல்வர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

banner

Related Stories

Related Stories