பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார்(98) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:-
புகழ்பெற்ற இந்தியத் திரைக்கலைஞரும் இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான திரு. திலீப் குமார் தனது 98-ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
“Tragedy king” என்று அனைவராலும் அறியப்பட்ட திலீப் குமார் இந்தியத் திரையுலகின் ஜாம்பவனாகத் திகழ்ந்தார். இவர் திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே மற்றும் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூசன் முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றவர் என்பதோடு, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதினை எட்டு முறை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலைப்பணியுடன், மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மக்கள் பணியும் ஆற்றிய அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகத்திற்கும், அவரது அன்பு இரசிகர்களுக்கும் என்னுடைய சார்பாக மட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் சார்பாகவும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.