சென்னையில் ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களில் இரண்டாவது குற்றவாளியான வீரேந்தர் ராவத்தை நான்கு நாள் போலிஸ் காவலில் எடுத்து இரண்டாவது நாளாக தரமணி போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அரியானா மாநிலம் மேவட் மாவட்டம் பல்லப் கர்க் பகுதியைச் சேர்ந்த அமீர் அர்ஷ் தன்னுடன் தமிழகம் வந்து இருசக்கர வாகனம் ஓட்டினால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ஒப்பந்தம் செய்து தன்னை தமிழகம் அழைத்து வந்ததாக போலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள வீரேந்திர ராவத் இரண்டாவது நாள் விசாரணையில் தரமணி போலிஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தான் ஏழாம் வகுப்பு வரை படித்து உள்ளதாகவும் தனக்கு ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள தொழில்நுட்பங்கள் தெரியாது என்றும், இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்காகவே தன்னை அழைத்து வந்ததாகவும், தான் பிளம்பராக வேலை பார்த்து பிழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏ.டி.எம் இயந்திரங்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பார்த்தவுடன் தனக்கு இரண்டு லட்சம் ரூபாய் வேண்டும் என்று அமீர் அர்ஷிடம் கேட்டதாகவும் அரியான வந்தபிறகு தருவதாக தெரிவித்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தரமணி போலிஸார் வீரேந்திர் ராவத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.