தமிழ்நாடு

“அகத்தீஸ்வரர் கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.. தமிழ்நாடு முழுக்க நடவடிக்கை தொடரும்”: அமைச்சர் சேகர்பாபு

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அகத்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 20 கோடி மதிப்புடைய 2 ஏக்கர் நிலத்தை அமைச்சர்கள் முன்னிலையில் மீட்கப்பட்டது.

“அகத்தீஸ்வரர் கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.. தமிழ்நாடு முழுக்க நடவடிக்கை தொடரும்”: அமைச்சர் சேகர்பாபு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை, குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 2.02 ஏக்கர் நிலத்தை பல ஆண்டுகள் முன்பு 11 நபர்கள் வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இந்த சொத்தை மீட்பதற்காக கடந்த 2017ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி கடந்த 2018ம் ஆண்டு வெளியேற்று உத்தரவு பெறப்பட்டது. அந்த உத்தரவின்படி கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதிஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பலத்த போலிஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலுக்கு உண்டான சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற முதலமைச்சர் உத்தரவின் பெயரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நெமிலிச்சேரியில் அமைந்துள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இந்த இடத்தில் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பை ஒருவர் ஆக்கிரமித்து, அதை கடைகளாக வாடகைக்கு விட்டு அதில் வருகின்ற வருவாயை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

அதனை அறிந்த, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்றவுடன் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு ஆய்வு செய்து கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாக இந்த இடங்களின் அனைத்து விபரங்களையும் சேகரிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த இடம் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என உறுதியானதை அடுத்து இன்று இந்த நிலம் அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதுபோல் தமிழ்நாடு முழுவதும் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றி இருக்கிறது. அதுபோல் பல இடங்களை கைப்பற்றப்படுத்துவதற்கு உண்டான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்து இதுபோன்ற பணிகள் தொடரும்.

திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆகவே அவர்கள் தானாக முன்வந்து இது நமது சொத்தல்ல இறைவன் சொத்து என்று உடனடியாக அந்த இடங்களை திருக்கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories