தமிழ்நாடு

“ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு” - வீரர்களுக்கு நம்பிக்கையூட்டிய மு.க.ஸ்டாலின்!

விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உடல் நலத்தை பேணிப்பாதுகாத்து விளையாட்டுக்களத்தில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

“ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு” - வீரர்களுக்கு நம்பிக்கையூட்டிய மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

18,000 வீரர்களில் 10,000 பேர் தடுப்புசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமின்றி விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட உங்களில் ஒருவனாக உங்களுடைய முன்னேற்றத்திற்கு, உங்களுடைய வெற்றிக்கு உதவிட நான் என்றென்றும் தயாராக இருக்கிறேன்.

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால் நாட்டுக்குப் பெருமை. வீரர்கள், தனித்தனியாக இருந்தாலும் போட்டிகளில் பங்கேற்க அணி ஒற்றுமை மிகவும் முக்கியம். விளையாட்டு வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் தரக்கூடியவர்கள்.

வாழ்க்கையை விளையாட்டு என்று சொல்வார்கள். அரசியலை விளையாட்டாக நினைப்பவர்களும் நாட்டில் இருக்கிறார்கள். விளையாட்டுத் துறையை விளையாட்டாக எடுத்து கொண்டால், விளையாட்டாகப் போய்விடும். விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

விளையாட்டுப் போட்டிகள் குறித்து குழந்தைப் பருவத்திலேயே ஊக்குவிக்க வேண்டும். நானும் பள்ளிப் பருவத்தில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். சென்னை மேயர், துணை முதலமைச்சராக இருந்தபோது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். வீரர்களுக்கு என்ன தேவை என்ன என்பது எனக்கு தெரியும். வீரர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்.

கொரோனா போன்ற தொற்று உங்களைப் போன்ற விளையாட்டு வீரர்களின் சாதனைக்கும், உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக இங்கே தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் இல்லத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளைப் பொறுத்தவரை ஒரு அணி ரன் எடுத்தும் வெற்றிப்பெறலாம், எதிரணியினர் ரன் எடுப்பதை தடுத்தும் வெற்றிப்பெறலாம். ஒரு அணி கோல் அடித்தும் வெற்றிப்பெறலாம், எதிர் அணி கோல் அடிப்பதை தடுத்தும் வெற்றி பெறலாம்.

இந்த கொரோனா நோய்த் தொற்றுக்காலத்தில் முதற்கட்டமாக அத்தகைய தடுப்பாட்டத்தை ஆடுவதுபோல் தடுப்பூசி முகாம் இங்கு நடக்கிறது. இந்த சிறப்பு முகாமை அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயன்படுத்தி உங்கள் உடல் நலத்தை பேணிப்பாதுகாத்து விளையாட்டுக்களத்தில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆக.8 வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா புகன், வருண் ஏ தக்கர், கே.சி.கணபதி பாய்மர படகு போட்டியிலும், சத்தியன் மற்றும் சரத்கமல் ஆகியோர் டேபிள் டென்னீஸ் போட்டியிலும், பவானி தேவி வாள் சண்டைப்போட்டியிலும், மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்கில் மாரியப்பனும் கலந்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.

உலக அரங்கில் விளையாடவிருக்கிற நம் வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டிய கடமை இந்த அரசுக்கு உள்ளது. எனவே ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரருக்கு ரூ.3 கோடியும், வெள்ளிப்பதக்கம் வெல்பவருக்கு ரூ.2 கோடியும், வெண்கலப்பதக்கம் வெல்லும் வீரருக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும் என்பதை தமிழக அரசின் சார்பில் இப்பரிசுத்தொகையை அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக வீரர்களே சென்று வருக தரணியை வென்று வருக” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories