தமிழ்நாடு

“ஜி.எஸ்.டி கட்டமைப்பே சரியில்லை; மாற்றாவிட்டால் கடும் பாதிப்பு ஏற்படும்” - தமிழக நிதி அமைச்சர் பேட்டி!

மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஜி.எஸ்.டி கூட்டத்தில் வலியுறுத்தியதாக தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

“ஜி.எஸ்.டி கட்டமைப்பே சரியில்லை; மாற்றாவிட்டால் கடும் பாதிப்பு ஏற்படும்” - தமிழக நிதி அமைச்சர் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.

டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலிக்காட்சி மூலமாக கூட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மாநில அரசுகளிடம் வரிப்பணத்தைப் பெற்று அதையே ஒன்றிய அரசு திரும்பத் தருகிறது. தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள் அதிக அளவில் வரிப்பணத்தை விட்டுத்தருகின்றன. ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் குறித்து பிற மாநில அமைச்சர்கள் எனக்கு அறிவுறுத்தல்கள் அளித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி கவுன்சிலின் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. வருவாய், பொருளாதாரம், மக்கள் தொகை, உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மாநிலங்களுக்கு வாக்குகள் அளிக்கப்படவேண்டும்.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எங்களுடைய மறுப்பை பதிவு செய்துள்ளோம். தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு பேசுவதற்கான போதிய நேரம் வழங்கப்படவில்லை.

ஜி.எஸ்.டி கூட்டத்தில் மாநிலங்களின் உரிமையைப் பாதுகாப்பது குறித்துப் பேசினேன். அதிக வரி செலுத்தும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு முறையாக இல்லை. ஜி.எஸ்.டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்திற்கு 12,000 கோடி ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை வரவேண்டியுள்ளது. ஜி.எஸ்.டி கட்டமைப்பே சரியில்லை எனக் கூறுகிறோம். இதில் பெட்ரோலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவது சாத்தியமில்லை. கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ உபகரணங்களுக்கு சில மாதங்களாவது வரிவிலக்கு தருமாறு கோரினேன்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories