தமிழ்நாடு

தடுப்பூசி இறக்குமதிக்கு உலகளாவிய ஒப்பந்தம் கோர முடிவு - தடுப்பு பணிகளை முடுக்கிவிட்ட தமிழக முதலமைச்சர்!

தடுப்பூசி இறக்குமதி செய்வதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தடுப்பூசி இறக்குமதிக்கு உலகளாவிய ஒப்பந்தம் கோர முடிவு - தடுப்பு பணிகளை முடுக்கிவிட்ட தமிழக முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (12.5.2021) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் நடைபெற்ற கலைவாணர் அரங்கிலுள்ள முதலமைச்சர் அறையில், தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்திற்கு சுமார் 13 இலட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஒதுக்கீடு, 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்திற்குள் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு முனைப்புடன் எடுக்கும்.

தடுப்பூசி இறக்குமதிக்கு உலகளாவிய ஒப்பந்தம் கோர முடிவு - தடுப்பு பணிகளை முடுக்கிவிட்ட தமிழக முதலமைச்சர்!

மேலும், தமிழகத்தின் ஆக்சிஜன் பயன்பாட்டை ஒப்பிடும் போது, நமது மாநிலத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. இதனை உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 280 டன்னிலிருந்து 419 டன்னாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும், இன்னும் கூடுதலாக ஆக்சிஜன் தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது.

எனவே, போதிய ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை உடனடியாக அமைத்திடவும், பிற மாநிலங்களில் உள்ள எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து தமிழகத்திற்கு இரயில்கள் மூலமாக ஆக்சிஜனை கொண்டு வருவதற்கும், அவ்வாறு பெறப்படும் ஆக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சீராக விநியோகம் செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்திடுமாறு தொழில் துறைக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் முதலமைச்சர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிட்டார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தொழில் துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories