
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வல்லப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து நடத்துனர் சுந்தர்ராஜ். இவருக்கு கல்லூரியில் படிக்கும் வரபிரசாத் (17) என்ற மகன் இருக்கிறார்.
இந்த சூழலில் சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிக்க தனது வீட்டின் பின்புற வயல்வெளி பகுதிக்கு வரபிரசாத் சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த உயர் மின்அழுத்த மின்வயரை தெரியாமல் மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உடல் கருகி வரபிரசாத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இளைஞரின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக இதுகுறித்து போலீசுக்கும் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தாக தெரிகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணையை விரைந்து மேற்கொள்ளாத நிலையில், உயிரிழந்த இளைஞர் வரப்பிரசாத்தின் உறவினர்கள் மின்வாரியத்தின் அலட்சியத்தைக் கண்டித்து, வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் லட்சியத்தோடு செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாலாஜாபாத்-தாம்பரம் சாலையில் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கின் காரணமாக 17 வயது இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து மிகுந்த வாலாஜாபாத் தாம்பரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, அச்சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






