தமிழ்நாடு

“நான் கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி; அரெஸ்ட் பண்ண வந்திருக்கேன்” - நூதன முறையில் மோசடி செய்ய முயன்றவர் கைது!

கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி எனக்கூறி பெண் தொழிலதிபரை மோசடியாக கைது செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“நான் கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி; அரெஸ்ட் பண்ண வந்திருக்கேன்” - நூதன முறையில் மோசடி செய்ய முயன்றவர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னையில் மூதாட்டியின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க ஆய்வாளர் உடையில் சென்று மிரட்டியவரை கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகரில் வசிப்பவர் ஸ்ரீதேவி உன்னிதன் (84). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், வீட்டில் மேல் தளத்தில் அவரது பிள்ளைகள் வசிக்க, கீழ்த்தளத்தில் ஸ்ரீதேவி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீதேவி உன்னிதன் வீட்டில் இருந்தபோது கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி எனக் கூறிக்கொண்டு ஒருவரும் உடன் இரண்டு பேரும் அவரது வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியுள்ளனர். கதவைத் திறந்த அவர் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்.

கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி எனக் கூறியவர் முழு போதையில் இருந்துள்ளார். அவர் ஸ்ரீதேவியிடம், “மேல் அயனம்பாக்கத்தில் உள்ள உங்கள் இடம் எனது பூர்வீகச் சொத்து, அந்த இடம் தொடர்பான ஆவணங்களை என்னிடம் காட்ட வேண்டும். இல்லையெனில் கைது செய்வோம்” எனக் கூறி வாரண்டை காட்டியுள்ளார்.

அதற்கு ஸ்ரீதேவி உன்னிதன், “நீங்கள் யார், நான் ஏன் உங்களுக்கு ஆவணங்களைக் காட்ட வேண்டும்” என்று கேட்டுள்ளார். உடன் இருந்தவர்கள் அவரை ஆவணங்களை எடுத்துவரும்படி மிரட்டியுள்ளனர். இதையடுத்து ஸ்ரீதேவி, உங்களிடம் ஆவணங்களைக் காட்டமுடியாது எனச் சத்தம் போட்டுள்ளார்.

சத்தம் கேட்டு ஸ்ரீதேவியின் பேரன் சைலேஷ் கீழே வந்து விபரம் கேட்டுள்ளார். அதற்கு, “நான் டி.எஸ்.பி. இவரது சொத்துப் பத்திரத்தைப் பார்க்க வேண்டும். இதோ அரெஸ்ட் வாரண்ட்” என்று கூறியுள்ளார். அவர் போதையில் தடுமாறியபடி பேசியதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

“உங்களைப் பார்த்தால் டி.எஸ்.பி போலத் தெரியவில்லையே. யூனிஃபார்மில் கையில் ஆந்திர மாநில காவல்துறை போல் பேட்ஜ் உள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் இப்படி யூனிஃபார்ம் இருக்காதே? யார் நீங்கள்? உண்மையைச் சொல்லுங்கள்” என்று கேட்டுள்ளார்.

மேலும், அவர்களை வீடியோ எடுக்க முயன்றதால் சுதாரித்த அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளனர். அவர்களைத் துரத்திச் சென்ற சைலேஷ், டி.எஸ்.பி என்றவரை மட்டும் மடக்கிப் பிடித்து ரோந்துப் பணியில் இருந்த போலிஸாரிடம் ஒப்படைத்தார்.

அவரிடம் திருமங்கலம் போலிஸார் நடத்திய விசாரணையில், அவர் மேல் அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டேவிட் ஆனந்த்ராஜ் என்பதும், யானைக்கவுனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

ஸ்ரீதேவி உன்னிதன் அளித்த புகாரின் பேரில் போலி போலிஸ் டேவிட் ஆனந்த்ராஜை திருமங்கலம் போலிஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். டேவிட்டுடன் சென்று தகராறில் ஈடுபட்டு தலைமறைவான இரண்டு நபர்களையும் போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories