தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணியின் கரெப்ஷன் சாம்ராஜ்ஜியம்... உள்ளாட்சித்துறையில் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஊழல்!

எஸ்.பி.வேலுமணியின் எல்.இ.டி பல்பு கொள்ளை மட்டுமே ஆயிரம் கோடியை தாண்டும்.

எஸ்.பி.வேலுமணியின் கரெப்ஷன் சாம்ராஜ்ஜியம்... உள்ளாட்சித்துறையில் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஊழல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா பிளீச்சிங் பவுடர், கிருமினி நாசினி கொள்ளை ஆயிரம் கோடி
* பணி நியமனம், இடமாற்றம் ரூ.300 கோடி
* வாறுகால், ரோடு, குடிநீர் திட்டப்பணி ரூ.2 ஆயிரம் கோடி
* எல்.இ.டி பல்பு கொள்ளை ரூ.1000 கோடி
* மின்கம்ப எர்த் கொள்ளை ரூ.500 கோடி


தமிழகத்தில் மிகப்பெரிய நிர்வாகத்துறையான
உள்ளாட்சித்துறை 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,618 கிராம ஊராட்சிகள் என விரிந்து பரந்த அமைப்பினை கொண்டது. உள்ளாட்சி கட்டமைப்பு தொடர்பான அனைத்து பணிகளுக்கும் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது. கல்விக்கு அடுத்து அதிக நிதி ஒதுக்கீடு உள்ளாட்சித்துறைக்கே ஒதுக்கப்படுகிறது. உள்ளாட்சி துறையின் அமைச்சர் வேலுமணி கடந்த 10 ஆண்டுகளாக ஒரே துறையின் அமைச்சராக இருந்து வருகிறார். இவரது உறவினர்கள் துறையின் அனைத்து பணிகளையும் தங்களுக்கானதாக மாற்றி விட்டனர். 50 ஆயிரம் ஊழியர்களை உடைய உள்ளாட்சி துறையில் ஆண்டுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் புதிய நியமனங்கள் நடைபெறுகிறது.

ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலைக்கு கீழான பில் கலெக்டர், ஓஏ, வாட்ச்மேன், டிரைவர், ஓஹெச்டி ஆப்ரேட்டர், டேங்க் ஆப்ரேட்டர், துப்புரவு பணியாளர்கள் வரையிலான நியமனங்கள் தன்னிச்சையாக பண அளவுகோல் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. நியமனத்திற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் வழங்கும் நபருக்கு மட்டும் பணி நியமனம் செய்து வருகின்றனர். பணி நியமனம் வகையில் ஆண்டுக்கு ரூ.200 கோடி வரை வசூலிக்கப்படுகிறது. கமிஷனர், பொறியாளர், உயர் அதிகாரிகள் நியமன இடமாறுதல் வகையில் ஆண்டு தோறும் ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெறப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு கமிஷனர், பொறியாளர் ஆண்டிற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நகராட்சி, மாநகராட்சி வரவு செலவு அடிப்படையில் கமிஷன் துறை மேலிடத்திற்கு வழங்க வேண்டுமென்ற நடைமுறையும் தொடர்கிறது. ஊராட்சிகளில் வாறுகால், சாலைப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், மேம்பாலங்கள், ஸ்மார்ட் சிட்டி என அனைத்து பணிகளுக்கும் 10 சதவீதம் வரை கோட்டையில் கோலோச்சுபவருக்கு லஞ்சம் போகிறது. இந்த வகையில் ஆண்டிற்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் கைமாறுகிறது.

* தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் எல்.இ.டி பல்பு கொள்முதலில் ரூ.600 விலையிலான பல்பை ரூ.4 ஆயிரத்து 500க்கு அரசாணை போட்டு, இத்தொகைக்கு கொள்முதல் செய்து கொள்ளை தொடர்கிறது. எல்.இ.டி பல்பு கொள்ளை ஆயிரம் கோடியை தாண்டும்.

* இதற்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல் ஊராட்சிகளில் உள்ள பல லட்சம் மின்கம்பங்களில் பொறுத்தப்பட்ட எல்இடி பல்புகளுக்கு எர்த் கொடுப்பதாக கூறி பல்பில் இருந்து 4 மீட்டர் வயரை, அரையடி இரும்பு கம்பியில் பொருத்தி தரையில் அடித்ததற்கு ஒரு மின்கம்பத்திற்கு ரூ.800 பணத்தை உள்ளாட்சிகளில் கணக்கு எழுதி மெகா கொள்ளை அடித்த சம்பவம் உலக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ரூ.800 செலவில் போடப்பட்ட எர்த் எந்த மின்கம்பத்திலும் 10 நாட்களுக்கு பிறகு இல்லை. மாயமாகி விட்டது. இந்த வகையில் சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் கொள்ளை நடந்துள்ளது.
* கொரோனா காலத்தில் 30 ரூபாய் விலையிலான விளக்குமாற்றை ரூ.300 விலைக்கும், கிலோ ரூ.27 மதிப்பிலான ப்ளீச்சிங் பவுடரை ரூ.300க்கும், லிட்டர் ரூ.50 விலையிலான பினாயிலை ரூ.250க்கு கொள்முதல் செய்து கோடிகளை கல்லா கட்டி உள்ளனர். அத்துடன் ப்ளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்புத்தூளை வாங்கியும், ஒரு டன் பவுடர் வாங்கி 10 டன் பவுடர் வங்கியதாக போலி பில்களை வைத்து பணம் எடுத்த நிகழ்வுகள் நடந்துள்ளன. கொரோனா கால கொள்முதலில் மட்டும் ஆயிரம் கோடி கொள்ளை நடந்துள்ளது.
* ஊராட்சிகளுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு குப்பைத்தொட்டியை ரூ.25 ஆயிரத்திற்கு அரசாணை போட்டு கொள்முதல் செய்தனர். ஜிஎஸ்டி நடைமுறை வந்தபிறகு, அதே குப்பைத்தொட்டியை ரூ.29 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.
* மாநகராட்சி, நகராட்சிகளுக்கு குப்பை அள்ளுவதற்கான பேட்டரி வண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனை சிஎஸ்ஆர் என்ற மத்திய அரசு நிதியில் இதனை ரூ. ஒன்றரை லட்சம் மதிப்பிலான வண்டியை ரூ. இரண்டரை லட்சத்திற்கு கொள்முதல் செய்கின்றனர்.
* நூறு நாள் வேலை திட்டத்தில் ஆடு, மாடு, கோழி வளர்ப்போருக்கான கொட்டகை அமைத்துத் தர டெண்டர் நடைமுறை கூடாது. பயனாளிகள் மூலமே செய்ய வேண்டும். ஆனால் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள கொட்டகையை ரூ.1 லட்சத்திற்கு போட்டதாக ரூ.40 ஆயிரம் கொள்ளை நடக்கிறது.
* பசுமை வீடுகள், பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள் இரும்புக் கம்பி, சிமென்ட்களை உள்ளாட்சித்துறை மூலமே பெற வேண்டும். கிலோ ரூ.40 உள்ள கம்பியை, ரூ.50க்கு பயனாளிகளுக்கு தருகின்றனர்.

குமரி மாவட்டம்: ‘‘பொதுப்பணம் சூறையாடப்படுவதற்கு கிருஷ்ணகுமாரே சாட்சி’’
குமரி மாவட்ட அதிமுகவின் தோவாளை ஒன்றிய செயலாளராக இருந்தவர் கிருஷ்ணகுமார். கூடவே தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியின் உதவிகரமாக வலம் வந்தவர். திடீரென்று அவர் தனது ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 2021 சட்டமன்ற பொதுதேர்தலில் திறம்பட தேர்தல் பணியாற்றுவதற்கு எனது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் தோவாளை ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்திட வேண்டும் என கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதினார். அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

கூடவே கிருஷ்ணகுமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கட்சியினர் மத்தியில் வலம் வந்த நிலையில் அவர் தன்னிலை விளக்கம் ஒன்றை வாட்ஸ் ஆப் ஆடியோவாக பதிவிட்டுள்ளார். அதில், தோவாளை யூனியன் சேர்மன் திட்ட பணிகளுக்கு ஒப்பந்தகாரர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்வதாக கூறுகிறார்கள். நான் யாரிடமும் இருந்து பணம் பெற்றுக் கொள்ளவில்லை. டென்டர்களில் தலையிடுவது இல்லை. எந்த திட்டம் எத்தனை கோடியில் நடக்கிறது என்று புட்டு புட்டு வைத்தோடு, ‘‘நான் உங்களை சேர்மன் ஆக்கினேன், தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்றது எப்படி? என ஆண்டவனுக்கும், எனக்கும்தான் தெரியும்’’ என்று டென்டர்களில் நடைபெறும் முறைகேடு முதல் உள்ளாட்சி தேர்தலில் நடந்த முறைகேடுகள் வரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக நாகர்கோவிலில் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ‘‘சமீபத்தில் அதிமுக தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் ஒரு செய்தியை வாட்ஸ் ஆப்பில் உலாவ விட்டார். உள்ளாட்சி திட்டங்களில் அதிமுக டென்டர் கமிஷன் முறைகேடு அம்பலம் என்று செய்தி வந்துள்ளது. தோவாளையில் திட்ட பணிகள் முறைகேடு, குறித்தும் பணம் பங்கிடுதல் குறித்தும் வெளிப்படையாக சொல்லி அது வந்துள்ளது. பொதுப்பணம் சூறையாடப்படுவதற்கு கிருஷ்ணகுமாரே சாட்சியாக விளங்கிக்கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட ஆட்சியை மாற்ற உங்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.

திருச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளது. மேலும் இலுப்பூர், அறந்தாங்கி, ஆலங்குடி, அரிமளம், கீரனூர், கீரமங்கலம், அன்னவாசல், பொன்னமராவதி உள்ளிட்ட 8 பேரூராட்சிகள் உள்ளது. தேர்தல் நடைபெறாதா காரணத்தால் நகராட்சியில் செய்யப்படும் பணிகளுக்கு அதிகாரிகள் ஆயிரக்கணக்கான ரூபாய் பொய் கணக்கு எழுதி கொள்ளையடித்து வருகின்றனர். கொரானா நேரத்தில் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி வாங்கியதில் லட்சக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பதால் சாலை அமைப்பது, பொருட்கள் கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பொய் கணக்கு எழுதி லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளயைடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்ற ஓராண்டு காலம் ஆகியும் தற்போது வரை போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கடந்த காலங்களில் ஊராட்சிக்கு தேவையான தெருவிளக்கு, குப்பை வண்டிகள் உள்ளிட்ட பொருட்களை ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஊராட்சி நிதியில் பொருட்கள் வாங்கப்படும். ஆனால் தற்போதைய அதிமுக அரசில் ஊராட்சிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அரசே வினியோகம் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி தரமற்ற பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலம் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டு இது தொடர்பாக மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் 4 ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாநகராட்சியில் கடந்த 2005ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மாநகரில் பாதாள சாக்கடை பிரச்னை பிரதான பிரச்னையாக உள்ளது. பல இடங்களில் கழிவு நீர் ஆறுபோல் நகரில் ஓடுகிறது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் இதை கண்டுகொள்வதில்லை. இதை சரிசெய்கிறேன் என்ற பெயரில் பல லட்சம் வீணாகிறது. இதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை என்றும் எல்லா பணிகளிலும் கமிஷன் தலை வரித்து ஆடியதால் தரமற்ற நிலையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பூங்காக்களில் அமைக்கப்பட்டதில் பல கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

நகரில் குடிநீர் கொண்டு வரப்படும் குழாய்கள் தரமற்று போடப்படுவதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சப்ளை பல நாட்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் குடிநீருக்காக திண்டாடுகின்றனர். தரமற்ற குழாய்கள், பணிகளால் பல லட்சம் கொள்ளைபோய் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாகை நகராட்சியில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு பணிகள் நிறைவு பெறாமல் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான 3 பூங்காக்கள் திறக்கப்பட்டது. அதே போல் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கொரோனா நோய் பரவாமல் இருக்க தெருக்களில் அடிக்க வேண்டிய மருந்துகளை தினந்தோறும் தெளிக்கவில்லை. இதில் இருந்து பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டது. நாகை நகர பகுதியில் சாலைகள் போடாமல் சாலைகள் போடப்பட்டதாக கணக்கு காட்டி ரூ.3 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் உள்ளன. கரூர் நகராட்சியில் 2017- 18ம் ஆண்டில் 2 லாரிகளில் வைத்து குப்பைகளை சேகரிக்கும் வகையில் ரூ.2 கோடியில் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டது. இவை அனைத்தும் தரமற்ற நிலையில் வாங்கியதால் ஒரே ஆண்டில் பழுதடைந்து விட்டது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்து, அதனுடன் உரம் தயாரிக்கும் திட்டத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடப்பட்டும் எந்தவிதமான பயன்பாடும் இன்றி முடங்கிப் போயுள்ளது. கரூர் அரசு காலனி அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இறைச்சி கூடம் இதுநாள் வரை செயல்படவில்லை.

நகராட்சி பகுதிகளில் வசூலிக்கப்படும் வரி பணத்தில் 41 சதவீதம் சம்பளம் போன்றவற்றிக்கும், 51 சதவீதம் திட்ட பணிகளுக்கும் செலவிட வேண்டும். ஆனால், நகராட்சியில் தேவையின்றி கூடுதல் பணியாளர்கள் உள்ளதால் அவர்களுக்குத்தான் இந்த பணம் செலவிடப்படுகிறது. கூடுதல் பணியாளர்களை வேறு நகராட்சிக்கு அனுப்பி விட்டு, தூய்மை பணியாளர்களுக்கு செலவிட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. கரூர் நகராட்சியில் 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தினமும் ரூ.290 வழங்கப்படுகிறது. ஆனால், இவர்களுக்கான சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டும் மூன்று ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வரவில்லை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் நகராட்சி பகுதிக்கு வந்து தூய்மை பணி மேற்கொள்ளும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

காந்திகிராமம், அருகம்பாளையம், விவிஜி நகர், கோதூர் போன்ற பகுதிகளில் பழங்களை அரைத்து, அவற்றை உரம் தயாரிக்க பயன்படுத்தும் வகையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இயந்திரங்களை இயக்கும் திறன் படைத்த பணியாளர்கள் நியமிக்கப்படாமல், சாதாரண பணியாளர்களை கொண்டு செயல்படுத்தியதால் அவையும் பயனற்ற நிலையில் உள்ளது.துப்புரவு பணிக்கான உபகரணங்கள் அவ்வப்போது வழங்கப்பட வேண்டும். ஆனால், இவையனைத்தும் டெண்டர் விட்டு வாங்கியது போல கணக்கு காட்டு விட்டு, யாருக்கும் எந்த உபகரணமும் வழங்கப்படுவதில்லை.

இதன் மூலம் பல கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. கொரனோ காலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளமும் வழங்கப்படவில்லை. பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி நீரேற்றும் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என சுமார் 300 பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து, பிஎப், இஎஸ்ஐ ஆகியவற்றை 3 ஆண்டுகளாக செலுத்தாமல் முறைகேடு செய்து வருகிறார்கள். இதன்படி கடந்த 3 ஆண்டுகளில் ரூ.4 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

வேலூர் ஊரக வளர்ச்சிதுறை முறைகேடு
திருவண்ணாமலை மாவட்டத்தில், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஊழலால் உருகுலைந்திருக்கிறது. இந்த துறை மூலம் செயல்படுத்தும் எல்லா திட்டங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக, தூய்மை பாரத இயக்கம் மூலம் தனி நபர் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 44,500 கழிப்பறைகள் கட்டியதாக கணக்கு காட்டியுள்ளனர். ஆனால், 50 சதவீத கழிப்பறைகள்கூட கட்டவில்லை. ஒரே கழிப்பறை முன்பு, ஆட்களை மாற்றி மாற்றி நிற்க வைத்து புகைப்படம் எடுத்து பணத்தை சுருட்டியுள்ளனர். இத்திட்டத்தில் மட்டும் சுமார் ரூ.25 கோடி வரை சுருட்டப்பட்டுள்ளது.

அதேபோல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ஒரு வீட்டுக்கு ரூ.1.70 லட்சத்தை நான்கு தவணைகளில் வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் 24,720 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதில், இதுவரை 14 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. பயனாளிகளுக்கு முறையாக பணம் சேராததால், பல வீடுகள் கட்டி முடிக்காமல் பாதியில் முடங்கியிருக்கிறது. மேலும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் 60 சதவீத இயந்திர பயன்பாடு, 40 சதவீத மனித உழைப்பு என்ற அடிப்படையில் குளம், ஏரி, கால்வாய் தூர்வாருதல், குடிமராமத்து பணிகள் திட்டத்தில், இந்த மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.300 கோடி வரை முறைகேடு நடந்திருக்கிறது. எந்த இடத்திலும் தூர்வாரவில்லை. ஏரி கரைகள் பலப்படுத்தவில்லை. ஆனால், அரசு பதிவேடுகளில் மட்டும் பணிகள் நடந்திருக்கிறது.

மேலும், கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பொறுப்பேற்ற பிறகும், அவர்களுக்கு எந்த நிதி அதிகாரமும் வழங்கவில்லை. தூய்மைப்பணிக்கு துடைப்பம் வாங்குவது முதல், குப்பைத் தொட்டி, குப்பை வண்டி வரை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்து அனுப்பிவிடுகின்றனர். ஆனால், அதற்கான ‘‘செக்’’ மட்டும் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் இருந்து வழங்க வேண்டும் என்ற நெருக்கடி. ஒட்டுமொத்த கான்ட்ராக்ட்டை மந்திரி ஆளுங்க எடுத்திருக்காங்க, நாங்க எதுவும் செய்ய முடியாது என அதிகாரிகள் கைவிரிக்கின்றனர்.

நெல்லை ஊரையே சுரண்டிய ஸ்மார்ட் சிட்டி திட்டம்
நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷனுக்காக அவசர அவசரமாகடென்டர் விட்டு ஆளுங்கட்சி புகுந்து விளையாடியுள்ளது. 999 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அமல்படுத்துவதாக கூறி மாநகரில் இருந்து 3 பஸ் நிலையங்களையும் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். இதனால் மாநகர மக்கள் பஸ் நிலையமே இல்லாத நிலையில் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். நன்றாக இருந்த பாளை வஉசி மைதானத்தையும் தேர்தல் அறிவிப்பின் கடைசி நேரத்தில் டென்டர் விட்டு இடித்து விட்டனர். இதுபோல் தூத்துக்குடி மாநகரிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல பணிகளை செய்வதாக கூறி மாநகரையே அலங்கோலமாக்கியுள்ளனர். இதனால் மாநகராட்சி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பினாயில் பிளிச்சிங் பவுடரிலும் ஊழல்
உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சி, பேரூராட்சிகளில் பினாயில் மற்றும் பிளிச்சீங் பவுடரில் மெகா நூதன ஊழல் செய்துள்ளனர். ஒரே நிறுவனத்திற்கு டென்டர் விட்டு அவர்கள் தரும் பிளிச்சிங் பவுடரையே பயன்படுத்தும் நிலை ஏற்படுத்தப்பட்டது. தரமற்ற அந்த பிளிச்சிங் பவுடர் மற்றும் பினாயிலுக்கு திடீரென பில் தரப்பட்டு பணம் பெற்றுள்ளனர். இதிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

நன்றி - தினகரன்

banner

Related Stories

Related Stories