தமிழ்நாடு

“திறந்தவெளி கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது, கிராம சபை கூட்டங்களை ரத்து செய்தது ஏன்?”- ஐகோர்ட் கேள்வி!

அனைத்து திறந்தவெளி கூட்டங்களுக்கும் அனுமதி வழங்கும் பட்சத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்தாதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

“திறந்தவெளி கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது, கிராம சபை கூட்டங்களை ரத்து செய்தது ஏன்?”- ஐகோர்ட் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த வெள்ளைத்துரை என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், மதுரை ஒத்தக்கடை பகுதியில் வீர முத்திரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக கூட்டம் ஜனவரி 31, 2021-ல் நடைபெறுவதாகவும் இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை பரவி வரும் நேரத்தில் வீர முத்திரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக கூட்டம் நடைபெறுவது ஆபத்தானது. இந்தக் கூட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த கூட்டத்தில் 25,000 நபர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகம், அரசியல், விளையாட்டு, நிகழ்ச்சி ஆகியவற்றில் 200 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறி உள்ள நிலையில் 25,000 நபர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கியது ஏற்கதக்கதல்ல. எனவே வீர முத்திரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் கூட்டம் நடத்த வழங்கிய அனுமதிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் இந்தக் கூட்டம் நடத்த வழங்கிய அறிவிப்பை ரத்து செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் இன்று தமிழக அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ள நிலையில் இந்த வழக்கு, அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஜீ.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் உள்அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மட்டுமே 200 நபர்கள் அமர ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூட்டம் நடைபெறும் இடம் திறந்த அரங்கம் 14 ஏக்கர் என்பதால் 25,000 நபர்கள் அமரக்கூடியது என தெரிவிக்கப்பட்டது. மேலும் மதுரையில் தெப்பத் திருவிழா, ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே வீர முத்திரையர் முன்னேற்ற சங்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் அனைத்து திறந்த வெளி கூட்டங்களுக்கும் அனுமதி வழங்கும் பட்சத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்தாதது ஏன்? மதுரையில் நடந்த பா.ஜ.க கூட்டம் மற்றும் முதல்வர் கூட்டத்தில் எத்தனை நபர்கள் கலந்து கொண்டனர்? நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் அளவு எவ்வளவு என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எவ்வாறு நடைபெறுகின்றன எனக் கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில் கூட்டம் நடத்த கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக பலர் வருகை புரிந்திருப்பார்கள். தற்போது தடை விதித்து உத்தரவு பிறப்பித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இன்றைய கூட்டத்திற்கு தடை விதிக்க விரும்பவில்லை.

ஆனால் இதுபோன்ற கூட்டங்களுக்கு அனுமது அளிக்கப்படுகையில், கொரோனா நோய்த்தொற்று காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். அரசுத்தரப்பில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் கூட்டம் நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

கூட்டம் எவ்வளவு நேரம் நடைபெறும், எவ்வளவு நபர்கள் கலந்து கொள்வார்கள் என்பது தொடர்பான விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கூட்டத்தில் பேச்சாளர்கள் யாரும் பேசக்கூடாது.

விழாக்குழுவினர் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் பொறுப்பேற்க வேண்டும்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். இந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப் பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories