தமிழ்நாடு

கோவையில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை கண்டித்து ஜனவரி 7ம் தேதி தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்ட குளங்கள் சீரமைப்பு பணிகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து ஜனவரி 7ம் தேதி கோவையில் தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவையில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை கண்டித்து ஜனவரி 7ம் தேதி தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்ட குளங்கள் சீரமைப்பு பணிகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளையும், தரமில்லாத கட்டுமானப் பொருள்களை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் செய்வதைக் கண்டித்தும், கோவை பந்தய சாலை பகுதியில் நடைபெறும் அலங்கோலங்களை கண்டித்தும், அங்கு வணிக கடைகள் அமைக்கும் முயற்சிகளை கண்டித்தும், 07.01.2021, வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில், செஞ்சிலுவை சங்கம் அருகில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவையில் ரூ.62 கோடி மதிப்பில் உக்கடம் பெரிய குளம் பணிகள், ரூ.40 கோடி மதிப்பில் வாலாங்குளம் பணிகள், ரூ.31 கோடி மதிப்பில் செல்வ சிந்தாமணி குளத்தின் பணிகள் , சிங்காநல்லுார் குளத்தில் ரூ.12.47 கோடியில் பணிகள், போன்ற பல்வேறு கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் உள்ளிட்ட மொத்தம் சுமார் 998 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருவதாக கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இவற்றில் , கோவை , உக்கடம், பெரியகுளம் வடக்கு பகுதியில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கப்படும் என குளத்தில் சுமார் 25 அடி தூரம் மண் போட்டு, மூடப்பட்டு , அதில் திட்டப்பணிகள் நடத்தப்பட்டுள்ளது. குளக்கரைகளை மேம்படுத்தும்போது, குளங்களின் அளவை குறைக்கக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், நீதிமன்றத்தையும் மீறி ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் குளக்கரையோர பகுதிகளை மூடி வருகின்றனர்.

மேலும், பெரியகுளத்தில் தற்போது முழு அளவில் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இங்கே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எந்த முயற்சியும் கோவை மாநகராட்சி எடுக்கவில்லை. குளங்களில் உள்ள சாக்கடை நீர்தேக்கம் தடுக்காமல் பெரும் தொகை செலவிடுவதால் எந்தப் பயனும் கிடையாது.

குளத்தின் கரையை அழகுபடுத்துவதாகச் சொல்லிவிட்டு, அதில் துர்நாற்றம் வீசும் சாக்கடை நீரை தேக்கி வைத்தால் மக்கள் எப்படி பயன்படுத்த முடியும்? அந்த குளக்கரையோரம் , சிறிது நேரம் நின்று பார்க்கும் மக்கள், கழிவு நீரின் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்திக் கொண்டு ஓடும் அவலம் இருக்கிறது.

இந்தக் குளத்தில் பணிகள் அரை குறையாக இருக்கும்போதே கடந்த 25.06.2020 அன்று, தமிழக முதல்வரை வரவழைத்து, அவசரகதியில் திறந்து வைக்கப்பட்டது அது என்ன நோக்கத்திற்காக அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது என்று மக்கள் அனைவரும் அறிவார்கள்.

கோவையில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை கண்டித்து ஜனவரி 7ம் தேதி தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

23.83 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட வாலாங்குளம் சீரமைக்கும் பணிகளும் 30 சதவீதம் கூட முடியவில்லை. இக்குளத்தில், கோவை அரசு மருத்துவமனை கழிவுநீர் தேங்குகிறது. இக்குளத்து நீரின் துர்நாற்றத்தால் சிவராம் நகர், அபிராமி நகர், சுங்கம் உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் தவிக்கின்றனர். சாக்கடை நீரை சுத்திகரிக்காமல் ,நீர் நிலைகளை சீரமைக்காமல் அலங்கார பணிக்காக மட்டும் ஸ்மார்ட்சிட்டி நிதியில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், செல்வசிந்தாமணி குளத்தின் கரைப்பகுதியும் 31.47 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகிறது. இதிலும், சாக்கடை நீர்தான் தேங்கியுள்ளது. கோவையில் செயல்படுத்தப்படும் மேற்கண்ட பணிகள் உள்ளிட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தும் தரமில்லாத பொருள்களைக் கொண்டு, தரமற்ற நிலையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் பெரிய குளம் கரையோர பகுதியில் வணிக நோக்கத்திலான கடைகள் அமைக்கப்பட்டு, அந்த கடைகள் அனைத்தும் அ.தி.மு.கவினருக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. செய்யும் பணிகள் அனைத்திலும் லாபம் ஏதாவது இருக்கிறதா என்பதில் மட்டும்தான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்ணும் கருத்துமாக உள்ளார்.

அதுபோலவே கோவையில், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியின் கீழ் சுமார் 40 கோடி செலவில் பந்தய சாலை (ரேஸ் கோர்ஸ்) பகுதியில், தார் சாலை அமைக்கும் பணியினை கடந்த 12.06.2020 அன்று, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பணிகளை துவக்கி வைத்தார்.

ஏற்கனவே இந்த பந்தய சாலையை தினமும் ஆயிரக்கணக்கானோர் நடைபாதை பயிற்சிக்கும், போக்குவரத்துக்கும் உபயோகப்படுத்தி வருகின்றனர். கோவை மாநகரில் எவ்வளவோ சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ள நிலையில், மக்களின் பயன்பாட்டில், நல்ல நிலையில் இருந்த இந்த சாலையினை பெயர்த்தெடுத்து, மீண்டும் புதிய சாலை அமைப்பதாக கூறி, மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது முறையா?

மேலும் இந்த பந்தய சாலை பகுதியில் வணிக நோக்கத்திலான கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த கடைகள் அனைத்தும் ஆளுங்கட்சியினருக்கு ஒதுக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் வணிக நோக்கத்திலான கடைகள் அமைக்கக்கூடாது என்று கடந்த 2006 – 11 திமுக ஆட்சியில், கோவை மாமன்றத்தில் தீர்மானம் இயற்றப் பட்டுள்ளது.

உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்ட குளங்கள் சீரமைப்பு பணிகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளையும், தரமில்லாத கட்டுமானப் பொருள்களை பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை செய்வதைக் கண்டித்தும் பந்தய சாலை பகுதியில் நடைபெறும் அலங்கோலங்களை கண்டித்தும், அங்கு வணிக கடைகள் அமைக்கும் முயற்சிகளை கண்டித்தும், இது போன்ற நிர்வாகச் சீர்கேடுகளையும், மக்களைப் பற்றி நினைக்காத, மக்களின் நலனைப் புறக்கணித்த, ஆட்சி நடைபெறுவதையும் கண்டித்தும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மக்களைத் திரட்டி, 07.01.2021, வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில், செஞ்சிலுவை சங்கம் அருகில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories