தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.,18ம் தேதி உண்ணாநிலை போராட்டம் - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!

”விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் & நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் 18.12.2020 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டம்”

விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.,18ம் தேதி உண்ணாநிலை போராட்டம் -  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியை முற்றுகையிட்டு, அறவழியில் அமைதியாகப் போராடி வரும் விவசாயிகளுக்கும், அவர்கள் மத்திய பாஜக அரசின் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும்- அதன் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “இந்திய நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள கோடான கோடி விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த 19 நாட்களாக, அறவழியில் அமைதியாகப் போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் மனங்களில் கொழுந்துவிட்டெரியும் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் கொச்சைப் படுத்தி வருகிறது.

ஒட்டு மொத்த நாட்டு மக்களின் உணவுரிமைகளையும், உழுதுண்போரின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பதற்காக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கண்ணியமாகப் போராடி வரும் தேசப் பற்றாளர்களான விவசாயப் பெருமக்களை அவமதித்திடும் வகையில் - அந்தப் போராட்டத்தில் “மாவோயிஸ்டுகள்” புகுந்துவிட்டார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மண்ணை வாரியிறைத்துப் பேசியிருப்பதற்கும்; மத்திய அமைச்சர்கள் பலரும் இது போன்ற அபத்தமான கருத்துகளை வெளியிட்டு வருவதற்கும்; தி.மு.க தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.,18ம் தேதி உண்ணாநிலை போராட்டம் -  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!

விவசாயிகளின் மகத்தான போராட்டத்தை சரியாக மதிப்பிடாமல் அவமதித்துவரும் மத்திய பா.ஜ.க. அரசின் தவறான அணுகுமுறை குறித்து எந்தக் கருத்தையும் கூறாமல் - மத்திய அமைச்சர்களின் பிற்போக்குத் தனமான கருத்தையும் கண்டிக்காமல் - இருக்கும் முதலமைச்சர் பழனிச்சாமியின் சுயநலப்போக்கு மிகுந்த கவலைக்குரியது மட்டுமின்றி கண்டனத்திற்கும் உரியது.

தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடி வரும் விவசாயிகளுக்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உணர்வு பூர்வமாக தொடர்ந்து ஆதரித்து கூட்டாகவும்-தனியாகவும் போராட்டங்களை நடத்தி வந்தாலும், இதுவரை மத்திய பா.ஜ.க. அரசு “குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத” சட்டங்களையும், “இலவச மின்சாரத்தை ரத்து செய்ய” கொண்டு வரப்படும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற முன்வரவில்லை. இந்நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும், உணவுப் பாதுகாப்பிற்கு அடித்தளமாகவும் விளங்கும் விவசாயிகளையும்- அவர்களின் உரிமைகளையும் புறக்கணித்து; தொடர்ந்து எதேச்சதிகாரப் போக்குடனும்- ஆணவப் பேச்சுக்களுடனும் இப்போராட்டத்தைக் கையாளும் மத்திய பா.ஜ.க. அரசினையும் - அதை ஒரு வார்த்தை கூட தட்டிக் கேட்கத் தைரியமின்றி அடங்கி ஒடுங்கி இருக்கும் முதலமைச்சர் பழனிச்சாமியையும் கண்டித்தும் - டெல்லியில் கொரோனா காலத்திலும் உயிரைத் தியாக வேள்வியாக முன்னிறுத்தி, அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் - அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும் - 18.12.2020 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும்.

ஜனநாயக நெறிகளைப் பின்பற்றி, அறவழியில் விவசாயப் பெருமக்களுக்கு, தொடர்ந்து ஆதரவளிப்போம்! அவர்களின் கோரிக்கைகள் வெற்றி பெற எந்நாளும் துணை நிற்போம்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories