தமிழ்நாடு

காத்திருப்பு பட்டியலில் இருந்த  ஏழை மாணவர்களுக்கு மருத்துவ இடம்: திமுக சட்ட போராட்டத்தால் கிடைத்த வெற்றி!

காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஏழை மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

காத்திருப்பு பட்டியலில் இருந்த  ஏழை மாணவர்களுக்கு மருத்துவ இடம்: திமுக சட்ட போராட்டத்தால் கிடைத்த வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, கடலூரை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, மற்றும் இலக்கியா ஆகியோருக்கு கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இரண்டு மாணவிகளுக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தபோதும், ஆண்டு கல்வி கட்டணமாக 7 முதல் 8 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாணவிகள் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்ததால், இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என தி.மு.க-வின் கட்டண ஏற்பு அறிவிப்புக்குப் பிறகு நவம்பர் 20ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகியும் மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியாவுக்கு மருத்துவ இடம் வழங்கப்படாததை எதிர்த்து மாணவிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரண்டு மாணவிகளுக்கு இடம் வழங்கும் வரை, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும் என மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் தி.மு.க எம்.பி-யுமான வில்சன் வாதிட்டார். மேலும், கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

banner

Related Stories

Related Stories