தமிழ்நாடு

“சென்னை மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவே அமித்ஷா தமிழகம் வருகிறார்” - பூவுலகின் நண்பர்கள் குற்றச்சாட்டு!

சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் வந்தால் மத்திய அரசே காரணம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“சென்னை மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவே அமித்ஷா தமிழகம் வருகிறார்” - பூவுலகின் நண்பர்கள் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வளர்ச்சி என்ற பெயரில் சென்னை மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு அடிக்கல் நாட்ட அமித்ஷா தமிழகம் வருவதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் சாடியுள்ளார்.

எண்ணூர் பழவேற்காடு சதுப்பு நிலத்தில் பொதுத்துறை நிறுவனங்களால் நடக்கும் ஆக்கிரமிப்பை தடுக்காவிட்டால் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட பெரிய அளவிலான வெள்ளத்தை எதிர்கொள்ளும் சூழல் வரும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

வருகிற 21ஆம் தேதி தமிழ்நாடு வருகின்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார். அதில் எண்ணூருக்கு அருகேயுள்ள காமராஜர் துறைமுகத்தில் 900 கோடி மதிப்பீட்டில் புதிய இறங்குதளம் ஒன்றையும் திறந்து வைக்கிறார்.

இந்தத் திட்டம் மற்றும் எண்ணூர் பழவேற்காடு பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு ஆக்கிரமிப்பு திட்டங்களால் சென்னையில் மீண்டும் பெரிய வெள்ளம் ஏற்படும் வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டி எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு பிரச்சார இயக்கம் சார்பில் மத்திய் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதியுள்ள கடிதம் மற்றும் அறிக்கையினை சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டனர்.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பின்னர் கொசஸ்தலையாறு கடலில் கலக்கும் சதுப்பு நிலத்தில் 656 ஏக்கர் நிலப்பகுதியை மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களான காமராஜர் துறைமுகம் , பாரத் பெட்ரோலியம், வடசென்னை அனல்மின் நிலையம் ஆகியவை ஆக்கிரமித்துள்ளன என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பழவேற்காடு பகுதியில் நிகழும் ஆக்கிரமிப்புகளை நிறுத்தினால் மட்டுமே சென்னையை இன்னொரு பெரு வெள்ளத்திலிருந்து பாதுகாக்க முடியும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories