உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து கவனம் செலுத்தும் சூழலில், தமிழக அரசு காடுகளை பாதுகாக்கும் சட்ட திட்டத்தை திருத்தி ஈஷா மையம் உள்ளிட்ட பெரும் பணக்கார தனியார் நிறுவனங்களின் நலன்களை காப்பதற்காக வகுக்கப்பட்டதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி சுந்தர்ராஜன் வெளியிட்டு அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சுனாமி தாக்கிய கடந்த 26.12.2004 அன்று இந்திய காப்புரிமைச் சட்டத்தில் மிகவும் முக்கியமான மாற்றம் ஒன்றை அன்றைய காங்கிரஸ் அரசு செய்தது. அதற்கான சட்டத் திருத்தத்தில் அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கையொப்பம் இட்டார்.
அன்றுவரை ஒரு பொருள் செய்யப்படும் முறைக்கு மட்டுமே காப்புரிமை (Process patent) வழங்கப்பட்டது. சுனாமி தினத்தன்று செய்யப்பட்ட சட்டதிருத்தத்தின்படி ஒரு பொருளுக்கே காப்புரிமை (Product patent) வழங்கும் வகையில் அச்சட்டம் திருத்தப்பட்டது.
குறிப்பிட்ட பொருளை காப்புரிமை பெறாத மற்ற நிறுவனங்கள் வேறு முறைகளில் உற்பத்தி செய்வதை தடுக்கும் சட்ட நடைமுறை அது. இதன் மூலம் பெருவணிக நிறுவனங்களின் குறிப்பிட்ட பொருட்களின் மீதான ஏகபோக உற்பத்தி உரிமை மேலும் வலுப்படுத்தப்பட்டது.
உயிர் காக்கும் மருந்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இது மக்களுக்கு எதிரான விளைவுகளைத் தரக்கூடியது. ஆளும் வர்க்கம் சொல்லியதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்ட அப்துல் கலாம், மக்களுக்கு எதிரான இந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்து அன்று கையெழுத்திட்டார்.
இன்று கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தும் சூழலில் மிகப்பெரும் சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் சட்டத்திருத்தம் ஒன்றை கடந்த 30.03.2020 அன்று தமிழ்நாடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளை பாதுகாப்பதற்காக மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பு (Hill Area Conservation Authority – HACA) கடந்த 1990ம் ஆண்டு Town and Country Planning Act கீழ் நிறுவப்பட்டது. காட்டுப்பகுதி சுருங்கி வருவதை தடுப்பதற்காகவும், காடு சார்ந்த வளங்களை பாதுகாப்பதற்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்படுவதாக கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் உயிரியல் பன்மைவளமிக்க மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள நிலையில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் உள்ள காடு மற்றும் காட்டுக்கு அருகாமையில் உள்ள இடங்கள் இந்த மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பில் விடப்பட்டன.
இப்பகுதியில் இருக்கும் நிலத்தை எந்தப்பயன்பாட்டுக்கு மாற்றி அமைத்தாலும், இவ்வமைப்பின் அனுமதியுடன் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் அந்த நில அமைப்பு மாறுதலுக்கு ஒப்புதல் அளிக்கமுடியும்.
இந்நிலையில் கடந்த 2016, அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னதாக மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் நிலம் வாங்கியவர்கள் அந்த பகுதிகளில் வீட்டுமனை வியாபாரம் செய்யும் வகையிலும், கட்டிடங்கள் எழுப்புவதற்கு அனுமதிக்கும் வகையிலும் புதிய சட்டவிதிமுறைகள் “Tamil Nadu Regularization of Unapproved Layouts and Plots in Hill Areas Rules, 2020 வகுக்கப்பட்டுள்ளன.
இதற்கான அரசாணை 30.3.2020 வெளியாகியுள்ளது. இந்த விதிமுறைகள் மூலம் உரிய சட்ட அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அனுமதி அளிகின்ற வாய்ப்புகளும் உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளிடமோ, மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பு உறுப்பினர்களிடமோ எவ்விதமான ஆலோசனையும் மேற்கொள்ளாமலே இந்த புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நிலம் வாங்கிய ஏழை மற்றும் அப்பாவி மக்களின் துயர் துடைப்பதற்காக இந்த புதிய விதிமுறை வகுக்கப்படுவதாக இந்த விதிமுறையின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. மேலும் யானை வழித்தடம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்குள்தான் சர்ச்சைக்குரிய ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இந்த ஈஷா யோகா மையம் அமைந்துள்ள பகுதி யானை வழித்தடம் என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட நிலையிலும் அப்பகுதியை யானை வழித்தடம் என்று அறிவிக்க வேண்டிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சகம் இதுவரை அவ்வாறு அறிவிக்கவில்லை.
எனவே அப்பகுதிகளில் எந்தவிதமான அரசு அனுமதி கோரியும் மனுகூட செய்யாமலே, மிகப் பிரமாண்டமான கட்டிடங்களையும், சிலைகளையும் நிறுவியுள்ள ஈஷா மையம் தற்போதைய புதிய விதிமுறைகளின் கீழ் பலன் அடையப்போகிறது. இந்த ஈஷா மைய நிர்வாகிகளை ஏழைகள் என்றோ, படிப்பறிவற்ற அப்பாவிகள் என்றோ குறிப்பிடமுடியாது.
ஈஷா யோகா மையத்திற்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகிய அமைப்புகளின் முன் நிலுவையில் இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த புதிய விதிமுறையை வகுத்துள்ளது. இந்த புதிய விதிமுறை ஈஷா மையம் உள்ளிட்ட பெரும் பணக்கார தனியார் நிறுவனங்களின் நலன்களை காப்பதற்காக வகுக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து கவனம் செலுத்தும் சூழலில், தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு அவசர அலுவல்கள் மட்டுமே செய்யப்படும் நிலையில், எவ்வித அவசரமும் இல்லாத இந்த புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.
இது போன்ற அரசின் பொறுப்பற்ற செயல்களால் சூழல் பாதிக்கப்பட்டு, புவி வெப்பநிலை உயர்வதாலேயை கொரோனா வைரஸ் தொற்று போன்ற ஆபத்துகள் ஏற்படுவதாக சூழலியல் ஆய்வாளர்களும், நிபுணர்களும் கூறிவரும் நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பெரும் கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு அரசு இந்த புதிய விதிமுறையை எந்தவிதமான நிபந்தனையுமின்றி திரும்பப் பெறவேண்டும். காடுகளுக்கு தொடர்பில்லாமல் இருக்கும் பகுதிகள் குறித்த உரிய ஆய்வுகளை நடத்தி, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், மலைப்பகுதி பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோரிடம் விரிவான ஆலோசனை நடத்தி காட்டுப் பகுதிகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாத வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.