தொல்லியல் துறை பட்டயப்படிப்பு அறிவிப்பில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தம் செய்யப்பட்டு அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. முன்னதாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேப்போல், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள மறு அறிவிப்பில் தகுதிக்கான பிரிவில் செம்மொழி தமிழ் மொழி சேர்த்து வெளியிடப்பட்டது.
செம்மொழி அந்தஸ்து உள்ள மற்ற மொழிகளும் சேர்க்கப்பட்டு தொல்லியல் துறை இயக்குனர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை ஆய்வகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கிடையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கைக்கு பிறகும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் வலியுறுத்தலுக்கு பிறகு, அதாவது எதிர்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கிய பிறகே, மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப் படிப்பில் தமிழ் மொழியை கல்வித்தகுதியில் இணைக்கக்கோரி, பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை எழுதினார்.
இந்நிலையில், அறிவிப்பு வெளியான பிறகு முதல்வர் எடப்பாடி எழுதிய கடித்திற்கு மதிப்பளித்தே, பிரதமர் மோடி தலையீட்டால் தொல்லியல் துறை மறு அறிவிப்பை வெளியிட்டது என சமூக வலைதளங்களில் அ.தி.மு.கவினர் பொய் பிரச்சாரம் செய்துவந்தனர். அ.தி.மு.கவினர் பொய்களுக்கு எதிராக பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டயரா-தரையா போட்டியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தொல்லியல் பட்டயப்படிப்புக்கு தமிழை குறைந்தபட்ச தகுதியா ஒன்றிய அரசு அறிவிக்க தான்தான் காரணம்னு சொல்றது வேடிக்கை.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எதிர்வினையால் தமிழகமே கொந்தளிக்க, நேற்று மாலை 7.30க்குத்தான் முதல்வர் கடிதமே எழுதினாரு.
அதேநேரம் நேத்தைய தேதிலதான் புது அறிவிப்பும் வந்திருக்கு. அப்படின்னா சாயங்காலம் 7.30க்கு அனுப்புன கடிதத்தை பாத்து, 'ஐயோ..பழனிசாமி கடிதம்'னு பிரதமரே பதறியடிச்சு புது அறிவிப்பை அடுத்த ஒரு மணிநேரத்துல வர வச்சாரா? இது தெரிஞ்சும், ‘இதுக்கு எடுபிடிஜிதான் காரணம்’னு சிலர் எழுதுறாங்க.
நீட் மசோதாவையே குப்பைல போட்டவங்க உங்க கடிதத்தை மதிச்சு உடனே ஆர்டர் போட்டாங்கனு சொன்னா, நம்புறதுக்கு தமிழகம் ஒன்னும் உ.பி-ம.பி கிடையாது. ஒருவேளை நீங்க சொல்றது உண்மைன்னா நீட்-பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு விவகாரத்துலயும் லெட்டர் எழுதி உடனே சாதிக்கலாமே அடிமைஜி. செய்வீர்களா?” எனத் தெரிவித்துள்ளார்.