தமிழ்நாடு

இருட்டில் கிடக்கும் மாநகராட்சி : மின் விளக்குகளை சீரமைப்பதில் ஏன் அலட்சியம் ? - கோவை தி.மு.க MLA கேள்வி!

தெருவிளக்கு பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டிய கோவை மாநகராட்சி நிர்வாகம் ஓட்டுமொத்தமாக முடங்கிப் போய் , செயலற்று கிடக்கிறது என நா.கார்த்திக் எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

இருட்டில் கிடக்கும் மாநகராட்சி : மின் விளக்குகளை சீரமைப்பதில் ஏன் அலட்சியம் ? - கோவை தி.மு.க MLA கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை மாநகராட்சி தெருக்களில் மின் விளக்குகளை சீரமைப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டுவது ஏன் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாநகராட்சியில் உள்ள பகுதிகளில் உயர்மட்ட மின் கோபுர விளக்குகள், சாலையின் மையப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள், சாலையோர தெரு விளக்கு கம்பங்கள் என பல்வேறு வகையான தெருவிளக்குகள் பயன்பாட்டில் இருக்கிறது. இவற்றை பராமரிப்பதில் மின்சார பல்புகளை மாற்றுவதில், மின் சாதனப் பெட்டிகளை சீரமைப்பதில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

கோவை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 74.70 கோடி ரூபாய் செலவில் மாநகர் முழுவதும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு விளக்குகளை எல்.இ.டி ஆக மாற்றப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. அறிவிப்பு வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பெரும்பாலான தெரு விளக்குகள் மாற்றப்படவில்லை. மின் சாதனப் பெட்டிகள் பல இடங்களில் திறந்து அபாயகரமான நிலைமையில் இருக்கிறது. பல்புகளை மாற்றாமல் மாற்றியது போல் கணக்கு காட்டி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இருட்டில் கிடக்கும் மாநகராட்சி : மின் விளக்குகளை சீரமைப்பதில் ஏன் அலட்சியம் ? - கோவை தி.மு.க MLA கேள்வி!
கோப்பு படம்

புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பங்கள் அமைக்கப்படவில்லை. சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், எஸ்.ஐ. எச்.எஸ் காலனி, பீளமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் 30 சதவீதத்திற்கு மேற்பட்ட மின் கம்பங்கள் பல்புகள் எரியாத நிலைமையில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் புகார் சொல்லி இருக்கிறார்கள்.

கோவை மாநகராட்சி நிர்வாகம் சரியான முறையில் தெருவிளக்குகளைப் பராமரிக்காத காரணத்தால் மாநகரினுடைய முக்கியமான சாலைகள், தெருக்கள் , பல நகர்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. ஒவ்வொரு வட்டத்தில் சராசரியாக 150 தெருவிளக்குகள் முதல் 200 தெருவிளக்குகள் வரை எரியாமல் உள்ளது. இதுவரை சுமார் 2௦௦௦௦ க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை .தெருவிளக்குகள் எரியாத காரணத்தால் இருளில் வழிப்பறி , கொள்ளைகள் நடைபெறுகிறது. பெண்கள் சாலைகளில் நடப்பதற்கே அச்சப்படும் சூழ்நிலை உள்ளது.

கடந்த மாதம் கூட டவுசர் அணிந்த கொள்ளையர்கள் சிலர் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் பகுதியில் சுற்றி வந்தார்கள். இருட்டான பகுதியில் திருடர்கள் சுற்றுவதாக பொதுமக்கள் தகவல் அளித்தும் , தெருவிளக்குகள் சம்பந்தமாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் கோவை மாநகராட்சி நிர்வாகம் எடுப்பதில்லை. தெருவிளக்கு பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டிய கோவை மாநகராட்சி நிர்வாகம் ஓட்டுமொத்தமாக முடங்கிப் போய் , செயலற்று கிடக்கிறது.

இருட்டில் கிடக்கும் மாநகராட்சி : மின் விளக்குகளை சீரமைப்பதில் ஏன் அலட்சியம் ? - கோவை தி.மு.க MLA கேள்வி!
கோப்பு படம்

சில இடங்களில் சாலை சீரமைப்பு பணியின் போது அகற்றப்பட்ட மின்கம்பங்கள் மீண்டும் திரும்பவும் அதே இடத்தில் அமைக்கப்படவில்லை. இரவு 10 மணிக்கு மேல் நகரின் முக்கிய பகுதியில் கூட தெரு விளக்குகள் எரியாமல் அணைக்கப்பட்ட நிலைமையில் இருக்கிறது. இருண்டு கிடக்கும் மின் கம்பங்களால் நகர் பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாகி விட்டது.

கோவை மாநகரில் சுமார் 3 ஆயிரம் மின்கம்பங்கள் சரி செய்யப்படாத நிலையில் இருப்பதாக தெரிகிறது. துருப்பிடித்தும், கான்கிரீட் சேதமடைந்தும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மீதும் விழுந்து விடும் வகையில் அபாயகரமான நிலைமையில் தெரு மின்கம்பங்கள் இருக்கிறது. இந்த மின் கம்பங்களை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.‌

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதியை வாங்கிக் கொண்டு உரிய முறையில் பணிகளை செய்யாமல் கோவை நகரை இருட்டாக மாற்றி கோவை மாநகராட்சி நிர்வாகம் சாதனை படைத்து வருகிறது. மின்சார செலவை 50 சதவீதம் குறைத்து காட்டுவோம் என பொய்யான அறிவிப்பு வெளியிட்டு தெரு மின் விளக்குகளை எரிய வைக்க விடாமல் ஏமாற்றி வருகிறார்கள்.

இருட்டில் கிடக்கும் மாநகராட்சி : மின் விளக்குகளை சீரமைப்பதில் ஏன் அலட்சியம் ? - கோவை தி.மு.க MLA கேள்வி!
கோப்பு படம்

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாரம் ஒருமுறை தெருவிளக்கு பராமரிப்புப் பணிகள் ஒவ்வொரு வட்டத்திலும் நடைபெற வேண்டும். பராமரிப்புப் பணியாளர்களும், அதற்குண்டான வாகனங்களும் அந்த குறிப்பிட்ட நாளில் எந்த ஒரு வட்டங்களுக்கும் வருவதில்லை.

கடந்த தி.மு.க ஆட்சியில், 3 மாதத்திற்கு ஒருமுறை மண்டலம் வாரியாக கோவை மாநகராட்சியில் தெருவிளக்கு பராமரிப்புப் பணிகள் கூட்டம் நடத்தப்பட்டு தெருவிளக்கு பராமரிப்புப் பணிகள் முறைப்படுத்தப்பட்டன. ஆனால் தற்பொழுது இந்தப் பணிகள் முறையாக பின்பற்றப்படாத காரணத்தால் கோவை மாநகரம் முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.

ஆகவே கோவை மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக தெருவிளக்கு பராமரிப்புப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு தெருவிளக்குகள் எரிவதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தெருக்களிலும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கோவை மாநகராட்சி நிர்வாகம் முன் வராவிட்டால், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுடன் இணைந்து மாபெரும் அறவழி போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories