தமிழ்நாடு

அனிதாவின் நினைவு நாளில் மேலும் ஒரு ‘நீட்’ பலி : ஹால் டிக்கெட் வராததால் புதுக்கோட்டை மாணவி தற்கொலை!

புதுக்கோட்டை மாவட்டம் அருகே நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனிதாவின் நினைவு நாளில் மேலும் ஒரு ‘நீட்’ பலி : ஹால் டிக்கெட் வராததால் புதுக்கோட்டை மாணவி தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகள் ஹரிஷ்மா. இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ளார்.

படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்ட ஹரிஷ்மா சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்காக ஹரிஷ்மா விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வரவில்லை.

இதனால் தனது சக நண்பர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது பலருக்கு ஹால் டிக்கெட் வந்தது தெரியவந்துள்ளது. இதனை வீட்டில் கூறி ஹரிஷ்மா அழுதுள்ளார். அப்போது அவரது அம்மாவும் ஹரிஷ்மாவின் மருத்துவர் ஆசை மண்ணாகி போய்விட்டதே என்று கூறி அழுதுள்ளார். இதனால் மனமுடைந்த ஹரிஷ்மா வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்திருக்கிறார்.

உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரிஷ்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவ-மாணவிகளின் உயிரிழப்பு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஹரிஷ்மா உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories